75 கி.மீ. நீள பசுமைப்பாதை: வடகிழக்கிலிருந்து தென்புறத்திற்குத் தடையின்றி செல்லலாம்
சிங்கப்பூரைப் சுற்றி தொடர்ந்தாற்போல் நடந்தும் சைக்கிளிலும் செல்வதற்குத் தோதாக அமைக்கப்பட்டுவரும் வட்டத்தீவு வழித்தடத்தின் முதல் பாதி திறக்கப்பட்டது.
மக்கள் இப்போது வடகிழக்கில் இருந்து தென்புறத்திற்குத் தடையில்லாமல் சென்று வரலாம். அந்த 75 கி.மீ. நீள பசுமைப்பாதை, ஆறுகள் வழியாக, கிழக்குக் கடற்கரை ஓரமாக, சிங்கப்பூர் ஆற்றை ஒட்டியபடி நீண்டு செல்கிறது.
லேப்ரடார் காட்டுப் பகுதிக்கு அருகே பெர்லயார் கிரீக்கில் போய் அது முடிகிறது.
வட்டத்தீவு வழித்தடத்தின் எஞ்சிய பகுதி 2035ல் அமையும். அப்போது அந்த வழிதான், தீவை உள்ளடக்கி அதைச் சுற்றிலும் அமைந்திருக்கும் ஆக நீளமான பொழுதுபோக்கு இணைப்புப் பாதையாக இருக்கும்.
வட்டத்தீவு வழித்தடத்தின் முதல் பாதி திறப்பை நினைவுகூரும் வகையில் அந்த வழியில் சாங்கி பே பாய்ண்ட்டில் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், இரு மரக்கன்றுகளை நேற்று நட்டார்.
கடற்கரை ஓரமாகவே பொதுமக்கள் நடந்து செல்ல, மெதுவோட்டத்தில் ஈடுபட, சைக்கிளில் செல்ல ஏதுவாக தீவைச் சுற்றி ஒரு பாதையை அமைக்கலாம் என்ற ஒரு யோசனை 2008ல் நகர மறுசீரமைப்பு ஆணையத்திற்கு ஏற்பட்டது. 150 கி.மீ. தொலைவுக்குச் செல்லும் அத்தகைய ஒரு வழித்தடத்தை அமைப்பதற்கான திட்டங்களை அப்போதைய துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் நான்கு ஆண்டுகள் கழித்து அறிவித்தார்.
நகர்ப் பகுதிகளில் இருக்கும் பாரம்பரிய இடங்களைக் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளுடன், வடக்கிலும் மேற்கிலும் இருக்கும் காட்டு வளப்பகுதிகளுடன் அது இணைக்கிறது.
வட்டத்தீவு வழித்தடத்தின் முதல்பாதி வழி நெடுகிலும் சூரிய சக்தி மின்னேற்றிக் கூடங்கள், ஓய்விடங்கள், உல்லாச இடங்கள், இயற்கை அழகு ரசிப்பிடங்கள் போன்ற பல்வேறு வசதிகளும் அமைந்திருக்கின்றன.
இதனிடையே, நேற்றைய நிகழ்ச்சியில் பேசிய துணைப் பிரதமர், சிங்கப்பூர் பசுமைத்திட்டம் 2030ன் கீழ் சிங்கப்பூரை இயற்கை நகராக்க மாற்றும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்தப் பாதை திறக்கப்பட்டு உள்ளது என்றார்.
சிங்கப்பூரில் 2030ல் ஒவ்வொரு குடும்பமும் தன் வீட்டில் இருந்து பத்து நிமிடம் நடந்தால் போதும், ஒரு பூங்காவை எட்டிவிடலாம் என்றார் திரு ஹெங்.