கொவிட்-19 கிருமித்தொற்றுக்குச் சிகிச்சை அளிக்க ஃபைசர் நிறுவனத்தின் பேக்ஸ்லோவிட் எனும் மாத்திரையை சிங்கப்பூரில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார அறிவியல் ஆணையம் நேற்று இதைத் தெரிவித்தது.
"மிதமான கொவிட் தொற்று ஏற்பட்டு, அது கடுமையான நோயாக மாறக்கூடிய அபாயத்தில் உள்ள பெரியவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிங்கப்பூரில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல் மாத்திரை இது.
"மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுவதையும் மரணத்தையும் குறைப்பது இதன் குறிக்கோள்," என்று ஆணையம் கூறியது.
சுகாதார அறிவியல் ஆணையத்தின் கிருமிப்பரவல் சிறப்பு அனுமதி நடைமுறையின் கீழ் அந்த மாத்திரைக்கு கடந்த மாதம் 31ஆம் தேதி இடைக்கால அனுமதி வழங்கப்பட்டது.
மருந்துகள் ஆலோசனைக் குழுவிடம் ஆலோசனை பெற்று ஆணையம் மாத்திரைக்கு ஒப்புதல் வழங்கியது.
பேக்ஸ்லோவிட் மாத்திரையை ஐந்து நாள்களுக்கு, தினமும் இரண்டு முறை எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதை கொவிட்-19 அறிகுறிகள் தொடங்கிய ஐந்து நாள்களுக்குள் கூடிய விரைவில் கொடுக்கப்பட வேண்டும்.
சுகாதார அமைச்சின் ஆணைப்படி, கடும் நோய் அபாயத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளித்து இந்த மாத்திரை வழங்கப்படும் என்று ஆணையம் கூறியது.
நிர்மட்ரெல்விர், ரிட்டொனவிர் எனும் இரண்டு மருந்துகளையும் கலந்து இந்த மாத்திரை தயாரிக்கப்படுகிறது.