ஜனவரி மாதம் 29ஆம் தேதி அதிகாலை 4.45 மணிக்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரி லெஃப்டினென்ட் கங்காதேவி ரௌட்டன், தெலுக் பிளாங்கா ரைஸ், புளோக் 39ல் தீ மூண்ட இடத்தை அடைந்ததும், புளோக்கின் 10வது மாடியிலிருந்து ஆரஞ்சு நிறத்தில் தீப்பிழம்புகள் ஆக்ரோஷமாக வெளிக்கிளம்புவதைப் பார்த்தார்.
தீயின் கடும் வேகத்தால் அந்த வீவக புளோக்கின் கண்ணாடி மற்றும் கான்கிரீட் துண்டுகள் கீழே விழுந்துகொண்டிருந்தன.
பீதியில் இருந்த குடியிருப்பாளர்கள், தூக்கத்திலிருந்து எழுந்து, புளோக்கின் கீழே கூடத் தொடங்கினர்.
பாதிக்கப்பட்ட வீட்டின் முன்கதவு வழியாக தீப்பிழம்புகள் வெளிவந்து கொண்டிருந்தன.
தெலுக் பிளாங்கா தீச் சம்பவத்தைக் கடந்த வாரம் ஊடகத்துக்கு நினைவுகூர்ந்த அலெக்சாண்டிரா தீயணைப்பு நிலையத்தின் துணைப் படைப் பிரிவின் தலைவரான 35 வயது லெஃப்டினென்ட் கங்காதேவி, "எனது 15 ஆண்டு அனுபவத்தில் நான் பார்த்த மிகப் பெரிய தீச்சம்பவம் இது. கொழுந்துவிட்டெரியும் அந்த வீட்டுக்குள் செல்ல நான் பயப்படவில்லை. ஆனால், அங்கிருந்த வெப்பம் மிக அதிகமாக இருந்தது. அந்தத் தீயில் எனது உடல் உருகுவதுபோல நான் உணர்ந்தேன்," என்றார்.
இத்தீச்சம்பவத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணியாற்றிய 48 வயது இந்தோனீசியப் பணிப்பெண் மாண்டார். இன்னொருவர் புகையை அதிகம் சுவாசித்ததால், மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
தீ மூண்ட வீட்டில் வசித்த 72 வயது சியா கெக் யோங், தனது குறும்புச் செயலால் தீ மூட்டியதற்காக ஜனவரி 29ஆம் தேதியன்று குற்றம் சாட்டப்பட்டார். அவர் மனநலப் பரிசோதனைக்காக விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு கருதி, 280 பேர் தங்கள் வீடுகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். நீரைப் பீய்ச்சியடிக்கும் இரண்டு சாதனங்களைக் கொண்டு தீ ஒரு மணி நேரத்தில் அணைக்கப்பட்டது.
இந்தத் தீயணைப்பு நடவடிக்கையில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் 14 வாகனங்களும் 45 தீயணைப்பாளர்களும் ஈடுபட்டனர்.
சமையலறையிலிருந்து எரிவா யுக் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்பட்ட கங்காதேவி, தீயணைப்பு நடவடிக்கையின் மேலதிகாரியான லெஃப்டினென்ட் கர்னல் ஹூ வெய் குன்னிடம் தெரிவிக்க, கர்னல் ஹூ, புளோக்கின் எரிவாயு விநியோகத்தை நிறுத்த உத்தரவிட்டார்.
"எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டவுடன், தீயணைக்கும் நடவடிக்கையின் கடுமை சற்று தணிய தொடங்கியது. தீயின் கடுமையை மேலும் மோசமாக்கிய எரிவாயு விநியோகத்தை நிறுத்தியிராவிடில், தீயை அணைப்பது முடியாததாகி இருக்கும்," என்றார் கர்னல் ஹூ.
தீயுடன் போராடும் நடவடிக்கையில் ஈடுபடாதவர்கள் புளோக்கின் அடியில் குடியிருப்பாளர்களை அப்புறப்படுத்துதல், அவர்களுக்கு மருத்துவக் கவனிப்பு அளித்தல் போன்றவற்றில் உதவி புரிந்தனர்.
தீயணைப்பு நடவடிக்கை முடிவடைந்தவுடன் தீயணைப்பாளர்கள் தங்கள் வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
அப்போது தமது கைபேசியைப் பார்த்த கங்காதேவி தமது 12, 10 வயது மகள்கள் தம்மை கைபேசியில் பலமுறை அழைத்ததை அறிந்து கொண்டார். கங்காதேவியின் கண வரும் ஒரு தீயணைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
"வீட்டை அடைந்ததும் எனது குடும்பத்தினர் எனக்குப் பாலும் நீரும் கொடுத்தனர். எனது இளைய மகள் எனது கை கால்களைப் பிடித்துவிட்டு நான் நலமாக இருக்கிறேனா என்று கேட்டார். நான் அவர்களிடம் தீயை அணைத்து மக்களைக் காப்பாற்றுவதன் முக்கியத்துவத்தை விளக்கினேன்," என்றார் கங்காதேவி.