புதுப்பிக்கப்பட்ட முழுமைத் தற்காப்புத் திட்டத்தில் இன்னும் அதிகமான உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் இதய இயக்கமீட்பு சிகிச்சை (சிபிஆர்) மற்றும் தானியங்கி வெளிப்புற இதய இயக்கமீட்பு சிகிச்சை (ஏஇடி) தொடர்பான பயிற்சிகளிலும் சமூக தொண்டூழியத் திட்டங்களிலும் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழுமைத் தற்காப்பு அடை யாளக் குறித் திட்டத்தின் கீழ், சீருடைக் குழுக்களின் உறுப்பினர்கள் மிக உயர்ந்த நிலையை அடை வதற்கு இவை புதிய தேவைகள் என்று தற்காப்பு அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
தேசிய மாணவர் ராணுவப் படை, சிறுமியர் படை போன்ற ஒன்பது சீருடைக் குழுக்களில் அங்கம் வகிக்கும் உயர்நிலை ஒன்று முதல் மூன்று வரை பயிலும் சுமார் 30,000 மாணவர்கள் இந்த வருடாந்திர பயிற்சியில் பங்கேற்பார்கள். ஆனால் இது கட்டாயமல்ல.
முழுமைத் தற்காப்பு தினம் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 15ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. முழுமைத் தற்காப்பில் ராணுவம், குடிமை, பொருளியல், சமூகம், உளவியல், மின்னிலக்கம் என ஆறு தூண்கள் உள்ளன.
1995ல் அறிமுகமான முழுமைத் தற்காப்பு அடையாளச் சின்னத் திட்டம், முழுமைத் தற்காப்பு பற்றிய விழிப்புணர்வையும் பங்கேற்பையும் பிரபலப்படுத்துகிறது. இதில் பங்கேற்பவர்கள் தங்கள் திறனுக்கேற்ப வெண்கலம், வெள்ளி, தங்க அடையாளச் சின்னங்களைப் பெறுவார்கள்.
தங்க அடையாளச் சின்னத்தைப் பெறுவதற்கு சீருடைக் குழுக்களின் உறுப்பினர்கள் சிபிஆர் சிகிச்சை, ஏஇடி சிகிச்சை தொடர்பிலான சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்தச் சான்றிதழைப் பெற்றவர்கள் விரும்பினால் அவர் களுக்கு உளவியல் முதலுதவி தொடர்பில் பயிற்சி அளிக்கப்பட்டு, அதன் சான்றிதழும் வழங்கப்படும்.
புதுப்பிக்கப்பட்ட இந்தப் பயிற்சி முறை சுயமாகக் கற்றல், சமூகக் கண்காணிப்புத் திட்டம் போன்றவற்றில் தொண்டூழியம் ஆகியவற்றை வலியுறுத்துகிறது.
சிபிஆர், ஏஇடி சான்றிதழ் திட்டத்தை முழுமைத் தற்காப்புக்கான மத்திய அமைப்பான நெக்சஸ், தெமாசெக் அறநிறுவனத்தின் பங்காளித்துவத்துடன் அறிமுகப் படுத்தியுள்ளது.
"புதுப்பிக்கப்பட்ட முழுமைத் தற்காப்பு அடையாளச் சின்னத் திட்டம் மாறிவரும் சமூகத்தைப் பிரதி பலிக்கிறது. இத்திட்டத்தின் மூலம் நமது சீருடைக் குழுக்களின் உறுப்பினர்கள் முழுத் தற்காப்பின் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் புரிந்துகொண்டு சமூகத்துக்கும் சிங்கப்பூருக்கும் தங்கள் பங்கை ஆற்றுவார்கள் என்று நம்புகிறோம்," என்றார் நெக்சஸ் அமைப்பின் இயக்குநர் கர்னல் கோ ஜெரிக்கா.
முழுமைத் தற்காப்பு தொடர்பிலான நடவடிக்கைகளையும் கண்காட்சிகளையும் சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம், தேசிய நூலக வாரியம், சிங்கப்பூர் டிஸ்கவரி நிலையம் போன்ற இடங்களில் காணலாம்.