இரண்டாம் உலகப் போரில் மாண்டோருக்கு 80 ஆண்டுகளுக்குப் பிறகும் உறவினர்கள் தொடர்ந்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானியர்களால் கொல்லப்பட்டோருக்கு பீச் ரோட்டில் உள்ள நினைவகத்துக்குச் சென்று உறவினர்கள் இன்றும் மரியாதை செலுத்துகின்றனர்.
இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்த காலத்தில் வாழ்ந்தோரில் தற்போது உயிரோடு இருப்போரின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்று மாண்டோரின் உறவினர்கள் சிலர் குறிப்பிட்டனர். இரண்டாம் உலகப் போர் நினைவுகள் இளம் சிங்கப்பூரர்களிடையே குறைந்துகொண்டே வருவதைச் சொல்லி இவர்கள் வருத்தப்படுகின்றனர்.
இரண்டாம் உலகப் போரில் ஜப்பானியர்கள் ஆட்சியில் மாண்ட சிங்கப்பூர் பொதுமக்களுக்கு மரியாதை செலுத்தும் சடங்கு முழுமைத் தற்காப்பு தினமான நேற்று 55வது முறையாக நடைபெற்றது. 1942ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ஆம் தேதியன்று சிங்கப்பூர் ஜப்பானியர்களின் பிடிக்குச் சென்றது.
1967ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூர் சீனர் வர்த்தகத் தொழிற்சபை இச்சடங்கை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்த ஆண்டின் சடங்கில் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
"80 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூர் ஜப்பானியர்களின் பிடிக்குள் சென்றபோது நமது முன்னோர் பலர் நகரின் மையப் பகுதியிலிருந்து கால்நடையாகச் சென்றனர், அதாவது இப்போது நாம் இருக்கும் இடத்திலிருந்து சாங்கி கடற்கரைக்குச் சென்றனர்.
"அவர்களில் பலரை அதற்குப் பிறகு காணவில்லை," என்று திரு சான் கூறினார்.