கி.ஜனார்த்தனன்
வெளியில் முழு சுதந்திரத்துடன் நடமாட இயலாமல், வேலையிடம், தங்குவிடுதி என முடங்கி இருந்த வெளிநாட்டு ஊழியர்களில் ஒரு சிலருக்கு, கூசுத் தீவுக்குச் செல்லும் அரிய வாய்ப்பு கிடைத்தது.
மனிதவள அமைச்சின் 'ஃபாஸ்ட்' குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் உட்பட 51 பேர், இந்தச் சுற்றுலாவில் பங்கேற்றனர். தங்குவிடுதி ஊழியர்களுக்கும் நடத்துநர்களுக்கும் ஃபாஸ்ட் குழு உதவி வருகிறது.
உட்லண்ட்ஸ் தங்குவிடுதி, நார்த் கோஸ்ட் தங்குவிடுதி ஆகிய விடுதி களிலும் கேலாங் பிஆர்பி சென்ட்ரலில் உள்ள வீடுகளிலும் தங்கிய ஊழியர்கள் இதில் கலந்துகொண்டனர். ஜனவரி 30ஆம் தேதி காலை 11 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 3 மணிக்கு முடிவுற்றது அவர்களின் பயணம். கூசுத் தீவிலுள்ள இயற்கைக் காட்சிகள், கடற்கரைகள், 'துவா பெக் கோங்' சீனக் கோவில், முஸ்லிம் பெருமக்கள் மூவரின் கல்லறைகள் அடங்கிய 'கிராமாட்' நினைவிடம் போன்ற பல இடங்களை ஊழியர்கள் சுற்றிப் பார்த்தனர்.
ஊழியர்களுடன் சென்றிருந்த மனிதவள அமைச்சு அதிகாரிகள், தங்கள் வீட்டில் செய்து வைத்திருந்த தின்பண்டங்களை அவர்களுடன் பகிர்ந்துகொண்டனர். அனைவரும் ஒன்றாக மதிய உணவு சாப்பிட்ட பின்னர் விளையாட்டுகளில் ஈடுபட்டனர்
பயணத்தில் பங்குபெற்றவர் களில் ஒருவரான நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கட்டுமான ஊழியர் வீரபத்திரன் சரவணன், 38, தீவிலுள்ள சீனக் கோயில்களைக் கண்டு ரசித்ததாகக் கூறினார். சிங்கப்பூரின் பழங்கால வரலாறு பற்றி மேலும் தெரிந்துகொள்ளும் இதுபோன்ற வாய்ப்பு எங்களுக்கு அதிகம் கிடைப்பதில்லை என்று அவர் கூறினார்.
தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து சிங்கப்பூருக்கு 2000ஆம் ஆண்டு வேலைக்கு வந்தார் கல்யாணி கண்ணன், 47.வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த தாம் அனைவரும் அன்புடன் பழகியது மிகவும் பிடித்திருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இரண்டு ஆண்டுகளாக நீடித்துள்ள நடமாட்டக் கட்டுப்பாடுகள் சங்கடத்தை ஏற்படுத்தி இருந்தாலும் இத்தகைய சிறிய நடவடிக்கைகளின் மூலம் அரசாங்கம் தங்கள் மீது கொண்டுள்ள அக்கறையை உணர்வதாக அவர் கூறினார்.
'சிண்டோ' பயணக் கப்பல் நிறுவனம் ஊழியர்கள் அனைவருக்கும் படகுப் பயணத்துக்கான நுழைவுச் சீட்டுகளை இலவசமாக வழங்கியது.
"ஊழியர்களில் பலர் மகிழ்ச்சி அடைந்ததைக் கண்டேன். பலர் இதற்கு முன்னதாக இத்தகைய படகில் சென்றதில்லை," என்று சுற்றுலா ஏற்பாட்டாளர்களில் ஒருவரும் மனிதவள அமைச்சு தொண்டூழியருமான கணேசன் தெரிவித்தார். இத்தகைய நடவடிக்கைகள் ஊழியர்களுக்கு உற்சாகத்தைத் தருகிறது என்று அவர் கூறினார்.