பல்லாண்டு கால வரலாற்றைப் பெற்றுள்ள தமிழ் முரசு நாளிதழ், அதன் மின்னிலக்கப் பயணத்தைத் தொடங்கியதை அடுத்து, உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்குக் கற்றல், கற்பித்தலிலும் கைகொடுக்கவுள்ளது. புதிய 'உங்கள் விரல்நுனியில் செய்திகள்' திட்டத்தின்வழி இனி திங்கள்கிழமைகளில் உயர்நிலைப்பள்ளியில் பயிலும் தமிழ் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தமிழ் முரசின் மின்னிலக்கப் பதிப்பு இலவசமாக வழங்கப்படவுள்ளது. இப்புதிய திட்டம் குறித்த மேல்விவரங்களையும் மாணவர்கள், ஆசிரியர்களின் கருத்துகளையும் தொகுத்து வழங்குகிறது இவ்வார இளையர் முரசு.
மாதங்கி இளங்கோவன்
தமிழ் முரசு நாளிதழில் இடம்பெறும் இளையர் முரசு பக்கம், 1999ஆம் ஆண்டுமுதல் சிங்கப்பூர் இளையர்களின் தமிழ்ப் பாடங்களில் முக்கியப் பங்கு ஆற்றி வருகிறது. இளையர்கள் புரிந்து வரும் சாதனைகள், அவர்களின் படைப்புகள் எனப் பல்வேறு சுவாரசியமான அங்கங்கள் இளையர் முரசில் ஒவ்வொரு வாரமும் இடம்பெற்று வருகின்றன.
மாணவர்களின் கற்றலுக்கு உறுதுணையாக இளையர் முரசுப் பக்கமும் தமிழ் முரசு நாளிதழும் விளங்க, கடந்த வெள்ளிக்கிழமையன்று 'உங்கள் விரல் நுனியில் செய்திகள்' என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டது.
இதன்படி கல்வி அமைச்சின்கீழ் இயங்கும் அனைத்து உயர்நிலைப்பள்ளிகளுக்கும் தமிழ் முரசின் மின் நாளிதழ் இலவசமாக வழங்கப்படவிருக்கிறது.
அகமது இப்ராஹிம் உயர்நிலைப்பள்ளியில் கல்வி அமைச்சு, நீ ஆன் கொங்சி, எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட் (எஸ்எம்டி) ஆகிய முத்தரப்பினரும் கையொப்பமிட்ட புரிந்துணர்வு ஒப்பந்தப்படி புதிய திட்டம் அமல்படுத்தப்படும்.
ஒப்பந்தம் கையெழுத்தான நிகழ்வின்போது அகமது இப்ராஹிம் உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள், தங்களுடைய மொழிக் கற்றலுக்கு தமிழ் முரசு மற்றும் அதில் இடம்பெறும் இளையர் முரசு பக்கம் எவ்வாறு கைகொடுத்துள்ளன என்பதை கல்வி அமைச்சர் சான் சுன் சிங் மற்றும் எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட் தலைவர் கோ பூன் வான் ஆகிய இருவருக்கும் விளக்கினார்கள்.
தமிழ் முரசில் வெளியான படங்கள், இணையக் காணொளிகள் போன்றவற்றைப் பயன்படுத்தி தமிழ்மொழி மீது தாங்கள் கொண்டுள்ள ஆர்வத்தையும் மொழியின் பெருமையையும் தங்களின் பேச்சின் மூலம் மாணவர்கள் வெளிப்படுத்தினர்.
"செய்தித்தாள் படிக்கும்போது, உலகில் நடக்கும் பிரச்சினைகளைப் பற்றி எங்களால் அறிந்துகொள்ள முடிகிறது. தேர்வுகளுக்குத் தகவல் சேகரிக்கவும் செய்தித்தாள் உதவுகிறது," என்று உயர்நிலை நான்கில் பயிலும் ஜானுப்பிரியா குமரவேல் கூறினார்.
உயர்நிலை மூன்றில் படிக்கும் நூருள் மர்லியா, "செய்தித்தாள் படிப்பதால் என்னுடைய பேச்சுத்தமிழில் முன்னேற்றம் தெரிகிறது. இதனால் வாய்மொழித் தேர்வுகளின்போதும் என்னால் சிறப்பாகப் பேச முடிகிறது. செய்தித்தாளில் அறிந்திடும் தகவல்களை வாய்மொழித் தேர்வில் கருத்து கூறப் பயன்படுத்துகிறேன். என்னுடைய எழுத்திலும் முன்னேற்றம் உள்ளது," என்றார்.
இளையர் முரசில் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கெனச் சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றால் அந்த மாணவர்கள் இதழ்களை மேலும் விரும்பிப் படிப்பார்கள் என்று இரு மாணவியரும் குறிப்பிட்டனர்.
அத்துடன் இளையர்கள் எழுதும் கதைகள், கட்டுரைகள் வெளியிடப்பட்டால் தமிழ்மொழியில் மாணவர்களின் ஆர்வத்தையும் படைப்பாற்றலையும் ஊக்குவிக்கலாம் என்றும் அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.
"தற்போது சொல்வளத்தைப் பெருக்கிக்கொள்ள மாணவர்கள் தமிழ் முரசை வகுப்பில் பயன்படுத்து கிறார்கள். இத்துடன் தங்களின் கட்டுரைக்குப் பொருத்தமான தகவல்களையும் கண்டறிவதற்குப் பயன்படுத்துகிறார்கள்," என்று அகமது இப்ராஹிம் உயர்நிலைப்பள்ளியின் தமிழ்மொழித் துறை ஒருங்கிணைப்பாளர் திரு பாலவிநாயகம் குறிப்பிட்டார்.
'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் 2021ஆம் ஆண்டுக்கான சிறந்த சிங்கப்பூரர்' விருது சக்திபாலன் பாலதண்டாயுதம், 28, என்பவருக்கு வழங்கப்பட்டது. இவர் அகமது இப்ராஹிம் உயர்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர் என்று பெருமிதத்துடன் நிகழ்வின்போது கூறப்பட்டது. தமக்கு அறிமுகமில்லாத ரேயா என்ற குழந்தைக்கு திரு சக்திபாலன் தமது கல்லீரலின் ஒரு பகுதியைத் தானம் செய்திருந்தார்.
இதைப்பற்றி தமிழ் முரசு நாளிதழ் செய்தி வெளியிட்டதை அடுத்து விருதை அவர் தட்டிச் சென்றதை அனைத்து மொழி நாளிதழ்களும் செய்தி வெளியிட்டிருந்தன.
தமிழ்ச் சமூகத்திலும் சமுதாயத்திலும் முன்னுதாரணமாக விளங்கும் நபர்களுக்குத் தகுந்த அங்கீகாரம் அளிக்கும் உள்ளூர் நாளிதழாக தமிழ் முரசு விளங்குகிறது என்று அகமது இப்ராஹிம் உயர்நிலைப் பள்ளியின் தமிழ் ஆசிரியர்களும் மாணவர்களும் பகிர்ந்துகொண்டனர்.
சக்திபாலன் போன்ற இளையர்களின் நற்செயல்களைப் பற்றியும் இதர இளையர்களின் சாதனைப் பயணங்களைப் பற்றியும் படிக்கும் மாணவர்கள், தாங்களும் வாழ்க்கையில் முன்னேறவும் நற்பணி ஆற்றவும் ஊக்கம் பெறுவர் என்று எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட் நம்புகிறது.
இந்த நம்பிக்கைக்கு ஏற்ப தமிழ் முரசு மற்றும் அதில் இடம்பெறும் இளையர் முரசு இவ்விரண்டும் மாணவர்களின் தமிழ்மொழிப் புழக்கத்தை அதிகரிக்கச் செய்யும். அத்துடன் மாணவர்களது சொல்வளத்தைப் பெருக்கும் நோக்கத்துடனும் தொடர்ந்து தரமான செய்திகளை வெளியிட முனையும்.
சமூக ஊடகங்களில் வலம்வரும் தமிழ் முரசு
தமிழ் முரசின் இன்ஸ்டகிராம் பக்கம் (@tamil_murasu), டிக்டாக் கணக்கு (tamilmurasu_sg), யூடியூப் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்கள் என வெவ்வேறு சமூக ஊடகத் தளங்களில் இளையர்களுக்காகவே தனித்துவமான காணொளிகளும் படச் செய்திகளும் இடம்பெறுகின்றன. தமிழ் முரசின் இணையப் பக்கத்திலும் காணொளிகள், வலையொலிப் பதிவுகள் ஆகியவற்றைப் பார்த்தும் கேட்டும் ரசிக்கலாம்.
மாணவர்களுக்கான முரசு
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்காக பிரசுரிக்கப்படும் தமிழ் முரசின் மாணவர் முரசு இதழையும் இளையர்களுக்காக வெளிவரும் இளையர் முரசு பக்கத்தையும் தமிழ் முரசின் திங்கள்கிழமை பதிப்பில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். தொடக்கநிலை மாணவர்களுக்கான சிறப்புக் கட்டுரைகளை மாணவர் முரசு வாரந்தோறும் தாங்கி வருகிறது. இளையர் முரசு இளையர்களின் சாதனைகள், இளையர் சார்ந்த தகவல்கள், கட்டுரைகள், அவர்களது படைப்புகள் ஆகியவற்றை ஏந்தி வருகிறது. மாணவர் முரசு, இளையர் முரசு இரண்டும் மாணவர்களிடையே தமிழ்மொழி மீதான ஆர்வத்தை வளர்த்து வருகின்றன.