சிங்கப்பூரில் கடந்த ஆண்டு 37 வேலையிட மரணங்கள் பதிவாகின. கொவிட்-19 நெருக்கடி
நிலைக்கு முன்பு 2019ஆம் ஆண்டில் பதிவான 39 வேலையிட மரணங்களை இது நெருங்கியுள்ளது.
2020ஆம் ஆண்டில் 30 பேர் வேலையிடங்களில் ஏற்பட்ட விபத்து கள் காரணமாக மாண்டனர்.
கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக பல வேலையிடங்களில் பணிகள் தடைபட்டதால் 2020ஆம் ஆண்டில் வேலையிட மரண எண்ணிக்கை வெகுவாகக் குறைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
வேலையிட மரணங்களைத் தவிர்க்க நிறுவனங்களில் கண்
காணிப்பை மேம்படுத்தவும் ஊழியர்களுக்குக் கூடுதல் பயிற்சி அளிக்கவும் மனிதவள அமைச்சு தயாராக இருக்கிறது.
2019ஆம் ஆண்டிலும் கடந்த ஆண்டிலும் வேலையிட மரண விகிதம் ஒவ்வொரு 100,000 ஊழியர்
களுக்கு 1.1ஆகப் பதிவானது.
வேலையிட மரண விகிதத்தை ஒவ்வொரு 100,000 ஊழியர்களுக்கு ஒன்றுக்குக் கீழ் கொண்டுவருவதே சிங்கப்பூரின் இலக்கு.
இந்த இலக்கை 2028ஆம் ஆண்டுக்குள் எட்ட சிங்கப்பூர் இலக்கு கொண்டிருப்பதாகவும் இதை அடைய திட்டமிட்டப்படி எல்லாம் சரியாக நடந்துகொண்டிருப்பதாகவும் மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது தெரிவித்தார்.
வேலையிடத்தில் ஊழியர்கள் காயம் அடைவதையும் மரணமடைவதையும் தவிர்க்க வேலையிடங்களில் உள்ள கருவிகள், பாதுகாப்பான முறையில் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய தவறிய முதலாளிகள் மற்றும் நிறுவனங்களுக்கு மேலும் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும். குறிப்பாக, உற்பத்தித்துறைக்கு இது பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டது.
சத்தம் அதிகமுள்ள, ரசாயனப் புழக்கமுள்ள வேலையிடங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்படும். அங்கு வேலையில் சேரும் புதிய ஊழியர்களுக்குக் கூடுதல் பயிற்சி அளிக்கப்படும்.
"வேலையிடங்கள் தொடர்ந்து பாதுகாப்பானதாக இருப்பதை உறுதி செய்வதில் அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்," என்றார் திரு ஸாக்கி.
ஊழியர்களுக்குப் பாதுகாப்பான சூழலை அமைத்துத் தரவும் சுகாதாரத்தைக் காக்கவும் முதலாளிகள் கடப்பாடு கொண்டிருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.