மசெகவின் 4ஆம் தலைமுறைத் தலைவராகத் தேர்வு பெற்றுள்ள அமைச்சர் லாரன்ஸ் வோங்
பெருந்தொற்று நெருக்கடி காலத்தின்போது, நிதி அமைச்சர் மற்றும் கொவிட்-19 நோய்ப்பரவலுக்கு எதிரான அமைச்சுகள்நிலைப் பணிக்குழுவின் இணைத் தலைவர் ஆகிய பொறுப்புகளில் திரு லாரன்ஸ் வோங் (படம்) வெளிப்படுத்திய தலைமைத்துவ பண்புகள், மக்கள் செயல் கட்சியின் (மசெக) நான்காம் தலைமுறைக் குழுவுக்கு தலைவராக நியமிக்கப்பட்டதற்கு முக்கிய காரணங்கள் என்று அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
நெருக்கடி கால நிர்வாகத்திலும் கொள்கைகளைக் கையாள்வதிலும் அவருக்கு உள்ள அனுபவம் அவரை நம்பகத்தன்மைமிக்க தலைவராக அடையாளம் காட்டியிருக்கிறது.
அடுத்த பொதுத் தேர்தல் வருவதற்கு இன்னும் மூன்று ஆண்டுகள் இருக்கும் நிலையில், நான்காம் தலைமுறைக் குழுவின் தலைவர் என்ற முறையில் சிங்கப்பூர் வாக்காளர்களிடம் தமது அரசியல் ஆதரவைப் பலப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அரசியல் கவனிப்பாளர்கள் கருத்துரைத்தனர்.
நான்காம் தலைமுறைக் குழுவை வழிநடத்தும் தலைவராக 49 வயது திரு வோங்கை தாங்கள் ஆதரிப்பதாக அமைச்சரவை உறுப்பினர்கள் ஏகமனதாக முடிவெடுத்துள்ளனர் என்று பிரதமர் லீ சியன் லூங் நேற்று முன்தினம் அறிவித்தார்.
அந்த முடிவுக்கு பின்னர் நடந்த கட்சிக் கூட்டத்தில் மசெகவின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒப்புதல் அளித்தனர்.
"2020 ஜனவரியில் அமைக்கப்பட்ட கொவிட்-19 நோய்ப்பரவலுக்கு எதிரான அமைச்சுகள்நிலைப் பணிக்குழுவின் இணைத் தலைவர் பொறுப்பேற்றிருந்த திரு வோங், நெருக்கடி காலத்தில் தமது தலைமைத்துவ பண்புகளைச் சிறப்பாக வெளிக்காட்டினார்," என்று மூத்த ஆய்வாளர் டாக்டர் வூ ஜுன் ஜி கூறினார்.
இவ்வாண்டு அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்த திரு வோங், ஒரு பிரதமருக்கு இருக்கவேண்டிய உயர்தர தலைமைத்துவ பண்புகளை தமது அறிக்கையில் வெளிப்படுத்தினார்.
பொருள், சேவை வரி அதிகரிக்கப்படுவதன் அவசியத்தை மிகத் தெளிவாக விளக்கிய திரு வோங், அந்த உயர்வு வசதி குறைந்தவர்களைப் பாதிக்காது என்றும் அதை ஈடுகட்டும் வகையில் நடவடிக்கைகளை அறிவித்தது கவரும் விதத்தில் இருந்தது என்று சிலர் கூறினர்.
"கொவிட்-19 நிலைமையையும் நிதி அமைச்சர் பொறுப்பையும் திரு வோங் சிறப்பாகக் கையாண்டார்," என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு இந்தர்ஜித் சிங் தெரிவித்தார்.
நான்காம் தலைமுறைக் குழுவின் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் போட்டியில் சில இளம் அமைச்சர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவினாலும் தமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளில் மிளிர்ந்து தமது மூத்த அமைச்சரவை சகாக்களின் நம்பிக்கையை திரு வோங் வென்றுள்ளார் என்றும் திரு சிங் கருத்துரைத்தார்.
"திரு வோங் அமைதியாகக் காணப்படுபவர். எதையும் ஆழ்ந்து சிந்தித்து தமது பேச்சுத்திறனால் எதையும் தெளிவாக விளக்கக்கூடிய ஆற்றல் பெற்றவர். இதனால் அவருக்கு அனைத்துலக அரங்கில் வரவேற்பு கிடைக்கும்," என்றார் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சமூகவியல் இணைப் பேராசிரியர் டான் எர்ன் செர்.
முன்னாள் அரசாங்க அதிகாரி யான திரு வோங், 2011 பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வென்று நாடாளுமன்ற உறுப்பினரானார்.பின்னர் 2014ல் முழு அமைச்சரானார். திரு வோங் இதுவரை கலாசார, சமூக, இளையர்துறை; தேசிய வளர்ச்சி; கல்வி; நிதி அமைச்சர் ஆகிய பொறுப்புகளை ஏற்றுள்ளார்.