நாட்டின் எல்லைகள் படிப்படியாக மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில் நிறுவனங்கள் கூடுதலான வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கட்டுமானத் துறையில் 'ஒர்க் பெர்மிட்' எனப்படும் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருக்கும் ஊழியர்கள் மீண்டும் வேலைக்கு அமர்த்தப்படுவதால் இது சாத்தியமானதாக மனிதவள அமைச்சின் முன்னோடி மதிப்பீட்டில் தெரியவந்துள்ளது.
சிங்கப்பூரில் 2022ன் முதல் காலாண்டுக்கான மொத்த வேலைவாய்ப்பு உயர்வில் வெளிநாட்டு ஊழியர்களின் பங்கு கணிசமானது என்று அமைச்சு குறிப்பிட்டது.
வேலைபார்க்கும் சிங்கப்பூர்வாசிகளைக் காட்டிலும் இவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகம் என்று அது கூறியது.
வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களைத் தவிர்த்து சிங்கப்பூரில் இந்த ஆண்டின் முதல் காலாண்டுக்கான மொத்த வேலைவாய்ப்பு 41,000க்கும் மேல் அதிகரித்ததாகக் கூறப்பட்டது.
சென்ற ஆண்டின் நான்காம் காலாண்டைவிட இது குறைவு என்றாலும், இந்த ஆண்டின் முதல் காலாண்டிலும் மொத்த வேலைவாய்ப்பு எண்ணிக்கை மிகவும் அதிகரித்ததாக அமைச்சு கூறியது. 2021ன் இறுதிக் காலாண்டில் மொத்த வேலைவாய்ப்பு எண்ணிக்கை 47,900 அதிகரித்தது.