சுமார் 22.5 மில்லியன் மலேசியர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு ரகசிய இணையத் தளங்களில் 10,000 டாலருக்கு (13,846 சிங்கப்பூர் வெள்ளி) விற்கப்பட்டு வருகிறது.
1940க்கும் 2004க்கும் இடையில் பிறந்த அந்த மலேசியர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு தாம் திருடி விற்ற தகவல்களைவிட இந்த முறை அதிகம் உள்ளதாக அவற்றை விற்பனைக்கு விட்டுள்ள இணைய ஊடுருவி கூறியுள்ளார்.
கடந்த முறை 1998 வரை பிறந்தவர்களின் தகவல்கள் மட்டுமே இருந்தன என்று அவர் கூறினார்.
இணைய ஊடுருவிகள் அந்த நாட்டின் தேசிய பதிவுத் துறையிலிருந்து திருடியதாகக் கூறப்படுகிறது.
மலேசிய அரசாங்கத்தின் மைஐடென்டிட்டி (MyIdentity) செயலி நிரலி இணைப்புமுறையின் மூலம் அந்தத் தகவல்கள் திருடப்பட்டுள்ளன.
மைஐடென்டிட்டி இணைப்புமுறை பல்வேறு அரசாங்க அமைப்புகள் வைத்திருக்கும் தகவல்களை இணைக்கிறது.
ஆனால் அந்தத் தகவல்கள் தேசிய பதிவுத் துறையிலிருந்து திருடப்படவில்லை என்று மலேசியாவின் உள்துறை அமைச்சர் ஹம்ஸா ஸைனுதீன் கூறினார்.
அரசாங்கத்திடமிருந்து தகவல்களைப் பெறும் சில அமைப்புகளிடம் இருந்து அவை திருடப்பட்டிருக்கலாம் என்றார் அவர்.
மலேசியாவில் தகவல் பாதுகாப்பு பற்றிய இந்த சம்பவங்கள் கவலையை ஏற்படுத்தி உள்ளன.