ஒரு கனரக நீள்வாகனத்துக்கும் லாரிக்கும் இடையில் இருந்த ஒரு பெரிய உலோகக் குழாயின் அடியில் சிக்கி, 49 வயது ஊழியர் ஒருவர் வெள்ளிக்கிழமை (மே 27) உயிரிழந்தார்.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை வீரர்கள் அவரை குழாய்க்கு அடியில் இருந்து வெளியே மீட்டு டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு அவர் மரணமடைந்தார் என்று மனிதவள அமைச்சு தெரிவித்தது.
இந்த மரணத்தையும் சேர்த்து இதுவரை வேலையிட விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25க்கு உயர்ந்துள்ளது.
இது 2016 மே மாதத்துக்குப் பிறகு ஏற்பட்டுள்ள ஆக அதிக எண்ணிக்கையாகும்.
ஊழியர் பற்றாக்குறை, கட்டுமானத் திட்டங்களை விரைவில் முடிக்கவேண்டும் என்ற அவசரம் நிலவுவதால் இப்படிப்பட்ட உயரிழப்புகள் அதிகமாக நிகழ்கின்றன.
மாண்ட அந்த ஊழியர் 18 டெஃபு அவென்யூவில் வேலை செய்து வந்தார்.
அவர் குட் இயர் காண்ட்ரெக்டர் நிறுவனத்தின் ஊழியர்.
விபத்து குறித்த விசாரணையை மனிதவள அமைச்சு தொடங்கியுள்ளது.
அந்தத் தளத்தில் தனது பணிகள் அனைத்தையும் நிறுத்திக்கொள்ளுமாறு குட் இயர் காண்ட்ரெக்டர் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது.