பல்வேறு துறைகளில் வேலையிட மரணங்கள் நிகழ்ந்ததை அடுத்து, பாதுகாப்பை உறுதிசெய்ய நேரம் எடுத்துக்கொள்ளும்படி நிறுவனங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
மனிதவள அமைச்சு, வேலையிட பாதுகாப்பு, சுகாதார மன்றம், தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ், நிறுவனப் பங்காளிகள் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை (மே 8) அன்று விடுத்த அறிக்கையில் இதைத் தெரிவித்தன.
வழக்கமான வேலைகளை நிறுத்தும் அந்த நேரத்தில் பாதுகாப்பு நிர்வாக முறைகளை மறு ஆய்வு செய்து, பழைய தவறுகளைத் திருத்திக் கொள்ளவேண்டும் என்றும் அவை கூறின.
கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் 10 வேலையிட மரணங்கள் நிகழ்ந்தன.
அதன்வழி, இவ்வாண்டு இதுவரை 20 வேலையிட மரணங்கள் நிகழ்ந்துவிட்டன.
கடந்த 2016 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்துக்குப் பிறகு இதுவே ஆக அதிக மரண எண்ணிக்கை ஆகும்.
பாரந்தூக்கியில் அமரும்போது பாதுகாப்பு வார், உயரமான இடங்களில் வேலை செய்யும் போது பாதுகாப்பு கவசங்கள் போன்ற அடிப்படை பாதுகாப்பு நடைமுறைகள் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டன.
ஊழியர்கள் அவற்றை அணியாததால் அல்லது அவை போதுமான இல்லாததால் மரணங்கள் நிகழ்ந்ததாக அமைப்புகள் கூறின.
பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்றபற்றி இருந்தால் கணிசமான மரணங்களை தவிர்த்து உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாம் என்றும் அறிக்கை கூறியது.
ஏழு துறைகளைச் சேர்ந்த சங்கங்கள் பாதுகாப்பு நடைமுறை அவகாசத்தைக் கடைபிடிக்கும்.
பாதுகாப்பை மறுஆய்வு செய்ய இரண்டு வாரங்கள் வேலைகள் நிறுத்தி வைக்கப்படும்.