சாங்கி விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில் நேற்று முன்தினம் இரவு அருகருகே இரு வேறு விபத்துகள் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூனூஸ் மேம்பாலத்துக்கு அருகே நடந்த இரண்டு விபத்துகள் குறித்தும் செவ்வாய்க்கிழமை இரவு பத்தரை மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.
முதலாவதில் மோட்டார் சைக்கிளும் ஒரு காரும் மோதிக்கொண்டன. இதன் தொடர்பில் 38 வயது கார் ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டார்.
அவர் மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டியதாகச் சந்தேகிக்கப்படுவதாகக் காவல்துறை நேற்று தெரிவித்தது.
இரண்டாவது விபத்தில் ஏழு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதாகக் கூறப்பட்டது. இதில் தொடர்புடைய இருவர் சுயநினைவுடன் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
இவர்கள் மோதிக்கொண்ட கார்கள் ஒன்றின் 50 வயது ஓட்டுநரும், அதில் இருந்த 54 வயது பயணியும் என்று தெரிகிறது.
மேலும் மூவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. இவர்கள் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டதாகக் கூறப்பட்டது.
'டிக்டாக்'கில் பதிவேற்றப்பட்டு பின்னர் 'ஃபேஸ்புக்'கில் பகிரப்பட்ட காணொளி ஒன்றில் தீவு விரைவுச்சாலையின் வலக்கோடித் தடத்தில் ஏழு கார்கள் மோதிக்கொண்டு நிற்பது தெரிகிறது.
'டொயோட்டா' கார் ஒன்று மற்றொரு 'டொயோட்டா' காரின் மேல் ஏறி நிற்பதையும், அவசர மருத்துவ உதவி வாகனம் ஒன்றையும் காணமுடிகிறது.
விபத்துகள் குறித்த விசாரணை தொடர்வதாகக் காவல்துறை தெரிவித்தது.