டாக்சி மோதி ஏறக்குறைய 20 மீட்டர் தூரத்திற்கு நேற்று முன்தினம் இரவு சாலையில் இழுத்துச் செல்லப்பட்ட 61 வயது மாது ஒருவர் உயிரிழந்தார்.
அங் மோ கியோ ஸ்திரீட் 21ல் இரவு 10.25 மணிக்கு இச்சம்பவம் குறித்து காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
அந்த மாது சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த மருத்துவ ஊழியர் ஒருவர் அறிவித்தார்.
டிரான்ஸ்-கேப் டாக்சி நிறுவனத்தைச் சேர்ந்த 53 வயது ஓட்டுநர், கவனக்குறைவுடன் டாக்சியை ஓட்டி மரணம் விளைவித்ததற்காக கைது செய்யப்பட்டார்.
அந்தப் பாதசாரி மீது டாக்சியை மோதிவிட்டு, குறிப்பிட்ட தூரத்திற்குச் சென்று 'யூ-டர்ன்' செய்தபோதுதான் தாம் யாரையோ மோதிவிட்டதை அந்த ஓட்டுநர் உணர்ந்தார்.
இந்தச் சம்பவத்தால் அந்த ஓட்டுநர் மிகுந்த வேதனை அடைந்ததாகவும் அவரை அமைதிப்படுத்த அவருடைய குடும்பத்தார் அழைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து டிரான்ஸ்-கேப் நிறுவனத்திடம் அந்த ஓட்டுநர் நேற்று தெரியப்படுத்தியதாக டிரான்ஸ்-கேப் பொது நிர்வாகி ஜாஸ்மின் டான் கூறினார்.
"இந்தச் சம்பவத்துக்காக நாங்கள் வருந்துகிறோம். இறந்தவரின் குடும்பத்தாரைத் தொடர்புகொண்டு அவர்களுக்குத் தகுந்த உதவியை வழங்க எங்கள் காப்புறுதி நிறுவனம் முயற்சி செய்து வருகிறது.
"இந்நிலையில், காவல்துறையின் விசாரணைக்கு நாங்கள் உதவி வருகிறோம்," என்று அவர் சொன்னார்.