கொவிட்-19 கிருமிப்பரவல் நேரத்தில் நுரையீரல் தொற்றுக்காக ஐந்து நாள் மருத்துவ விடுப்பு அளிக்கப்பட்ட மாது சட்டவிரோதமாக வீட்டிலிருந்து வெளியேறியதற்காக ஐந்து வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மிஷெல் ஃபூ ஷி சிங் 2020ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி இருமல், தொண்டை அழற்சி ஆகியவற்றுக்காக மருத்துவரைக் காணச் சென்றார். தொற்றுநோய்த் தடுப்புச் சட்டத்தின்கீழ் அவர் ஐந்து நாள்களுக்கு வீட்டிலேயே இருப்பது கட்டாயம் என்று மருத்துவர் நினைவுறுத்தியபோதும் 2020 ஜூலை 17ஆம் தேதி ஃபூ தனது மகனைப் பள்ளியில் கொண்டுவிடவும் பின்னர் வாடகை காரில் பயணம் செய்து திரையரங்குக்குச் சென்று நண்பர்களுடன் படம் பார்க்கவும் வெளியே சென்றார்.
மீண்டும் வாடகை காரில் வீடு திரும்பிய அவர் மறுநாள் அதிகாலை 3.30 மணியளவில் மீண்டும் வாடகை காரில் வெளியே சென்று ஏழு மணி நேரம் கழித்து வீடு திரும்பினார்.
பிடிபட்டவுடன் தான் வெளியே சென்றதை முதலில் அவர் மறுத்ததாகக் கூறப்பட்டது. மன உளைச்சலால் ஃபூ அவ்வாறு நடந்துகொண்டதாக அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறினார். இருப்பினும் குற்றச்செயலுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று கூறிய நீதிபதி ஃபூவிற்கு ஐந்து வாரச் சிறைத்தண்டனை விதித்தார்.
நாளை வரை அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.