தேசிய தின அணிவகுப்பில் ஆச்சரியமூட்டும் காட்சி
மாதங்கி இளங்கோவன்
சிங்கப்பூர் ஆயுதப் படைகள், இவ்வாண்டின் தேசிய தின அணிவகுப்பில் பேருந்திலிருந்து கடத்தப்பட்ட பிணைக்கைதிகளாக இருப்போரை மீட்டெடுக்கும் பாவனைப் பயிற்சியை முதல் முறையாக செய்து காட்டவிருக்கின்றனர். பேருந்தின் சன்னலை உடைத்து பிணைக் கைதிகள் காப்பாற்றப்படுவதைப் பார்வையாளர்கள் நேரடியாகக் காணலாம். இறுதியாக 2017ஆம் ஆண்டில் படைக்கப்பட்ட முழுமைத் தற்காப்புக் காட்சி, இவ்வாண்டு மீண்டும் அரங்கேறுகிறது.
நீரிலும் நிலத்திலும் கடற்படை முக்குளிப்புப் பிரிவைச் சேர்ந்தவர்களும் ராணுவ 'லெப்பர்ட்' பீரங்கி வண்டிகளும் மரினா பே மிதக்கும் மேடையில் ஊர்வலமாகச் செல்லவுள்ளனர்.
இந்தக் காட்சியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வதோடு சிங்கப்பூர் பாதுகாப்பு மற்றும் தற்காப்பு அமைப்புகளின் 50க்கும் மேற்பட்ட சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. புதிய 'சினுக்' ஹெலிகாப்டர்களும் 'ஹண்டர் ஏஎஃப்வி' பீரங்கி வாகனங்களும் அடுத்த தலைமுறை காவலர்களின் கார்களும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் தீயணைப்பு இயந்திரமும் இவ்வங்கத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் 'ரெட் ரைனோ' தீயணைப்பு வாகனம், காவலர்களின் மோட்டார் சைக்கிள்கள், ராணுவப் படை வீரர்கள் அணிவகுப்பில் பங்கெடுக்கின்றனர்.
தேசிய தின அணிவகுப்பில் நேரடியாக பங்கேற்பவர்கள் மட்டுமல்லாமல் காணொளி மூலமாகவும் பாடகர் குழு உட்பட வெவ்வேறு குழுக்கள் கலந்துகொள்வது இன்னொரு சிறப்பு அம்சமாக அமைகின்றது.
தேசிய சேவையின் 55வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தேசிய சேவையை முடித்த, தற்போதைய தேசிய சேவையாளர்களை கௌரவிக்கும் அங்கமும் இடம்பெறுகிறது. இதில் இளம் படை வீரர்கள் 'NS55' எனும் வடிவத்தை உருவாக்கி தேசிய சேவையாளர் களுக்கு மரியாதை செலுத்துகின்றனர். லெஃப்டினண்ட் கர்னல் டெஸ்மண்ட் ஃபூ இவ்வாண்டின் அணிவகுப்பை வழிநடத்துவார்.
சகோதரர்களான விஷ்ணுராம் பெரியசாமி,24, சந்தோஷ் பெரியசாமி, 15, இருவரும் இவ்வாண்டு அணிவகுப்பில் பங்கேற்கின்றனர். தேசிய சேவையை முடித்த கையோடு ராணுவத்தில் விஷ்ணு ராம் சேர்ந்தார்.
"முதல் முறையாக தேசிய தின அணிவகுப்பில் மரினா பே மிதக்கும் மேடையை வலம் வர வாய்ப்பு கிடைத்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி," என்று விஷ்ணுராம் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
அதேபோல முதன்முறையாக இவ்வணிவகுப்பில் கலந்துகொள்ளும் சந்தோஷ் பெரியசாமி, "என் அண்ணனுடன் சேர்ந்து அணி வகுப்பில் பங்கெடுப்பது பெருமையாக இருக்கிறது," என்றார்.
அணிவகுப்பில் தமது பங்கை ஆற்றவிருக்கும் சிங்கப்பூர் ஆயுதப் படைகளின் கார்ப்பரல் அட்டிலி கிரீத்தி ஆதித்ய குமார், 20, "இரண்டு ஆண்டு தேசிய சேவையின்போது இதில் பங்கேற்க வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கியது. தற்போது இவ்வாண்டு அணிவகுப்பில் கலந்துகொள்வது பெருமை அளிக்கிறது என்றார்.
மூன்று வருடங்களுக்குப் பின்பு மொத்தம் 2,000 பேர் கொண்ட 37 நேரடி மற்றும் மெய்நிகர் குழுக்கள் முழுமைத் தற்காப்புக் காட்சியில் கலந்துகொண்டு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டதற்கு முன்பிருந்த அளவில் தேசிய தின அணிவகுப்பு நடக்கும் என பார்வையாளர்கள் எதிர்பார்க்கலாம்.
கொவிட்-19க்கு முந்தைய வழக்கமான காலத்திற்குத் திரும்பும் நோக்கத்தோடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, கடந்த மூன்று ஆண்டு களில் இல்லாத மாபெரும் அணி வகுப்பில் 2,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.
மரினா பே மிதக்கும் மேடையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தேசிய அணிவகுப்பின் விவரங்களை ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டனர்.