அங் மோ கியோ பேருந்துப் பணி மனையில் கடந்த ஜூன் மாதம் பேருந்தை பழுதுபார்த்துக் கொண்டிருந்த ஊழியர் ஒருவர் மரண மடைந்தார்.
இந்தச் சம்பவத்தில் அங்கீகரிக்கப்படாத வாகனத்தை உயர்த்தும் கருவி 'ஜேக்' பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று மரண விசாரணை நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்தில் அடியில் திரு தின் சூன் ஃபாட் வேலை செய்துகொண்டிருந்தபோது ஜேக் ஒன்று வலு விழந்தது. இதனால் அவரது தலை சிக்கிக் கொண்டது என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தலையில் படுகாயத்துடன் 43 வயது ஊழியரான திரு தின் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இந்த அசம்பாவிதத்தை விசாரித்த விசாரணை அதிகாரியான ஆய்வாளர் லி சின் ரோங், அந்தச் சமயத்தில் எஸ்எம்ஆர்டியின் துணை நிறுவனமான ஸ்ட்ரெய்ட்ஸ் ஆட்டோமேட்டிவ் சர்விசஸ் என்று நிறுவனத்துக்கு திரு தின் பணியாற்றியதாகத் தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்கு ஸ்ட்ரைட்ஸ் நிறுவனம் விநியோகிக்காத ஜேக்குகளை திரு தின் கொண்டு வந்தது விசாரணையில் தெரிய வந்ததாகவும் அவர் கூறினார்.
மனிதவள அமைச்சின் வேலை தொடர்பான பாதுகாப்பு, சுகாதாரப் பிரிவின் திரு இங் சீ ஹிவியும் நேற்று சாட்சியம் அளித்தார்.
"சம்பவ இடத்தில் ஜேக்குகளைக் கொண்டு வருவதற்கு காரணமே இல்லை. அவை தரமான கருவிகளும் அல்ல," என்று மரண விசாரணை அதிகாரியான ஆடம் நக்கோடாவும் திரு இங் சொன்னார்.
கடந்த ஆண்டு ஜூன் 6ஆம் தேதி திரு தின்னும் அவரது இரண்டு சகாக்களும் மின்சாரப் பேருந்தை பழுதுபார்க்க அனுப்பி வைக்கப் பட்டனர். பேருந்தின் மொத்த எடை 7.5 டன். பேருந்தின் முன்பகுதி மட்டும் மூன்று டன் எடையைக் கொண்டது. பேருந்தின் முன்பகுதியைத் தாங்கிப் பிடிக்க இரண்டு ஜேக்குகள் பயன்படுத்தப்பட்டன.
இரண்டு ஜேக்குகளும் மொத்தம் இரண்டு டன் எடையைத் தாங்கக் கூடியவை. பழுதுபார்ப்புப் பணி முடிவடைந்ததும் வாகனத்தின் அடியிலிருந்த திரு தின், ஒரு ஜேக்கின் உயரத்தைக் குறைத்திருக்கலாம்.
அதன் விளைவாக மற்றொரு ஜேக்கின் மீது எடை கூடி அந்த ஜேக்கின் பிடி விடுபட்டிருக்கலாம் என்று திரு இங் மேலும் தெரிவித்தார்.
இந்த விசாரணையில் திரு தின்னின் சகாக்களில் ஒருவரும் சாட்சியமளித்தார். முறையான ஜேக்கு களைப் பயன்படுத்த விரும்பியதாகக் கூறிய அவர், மேற்பார்வையாளரான திரு தின் அதனை ஏற்க மறுத்துவிட்டதாகச் சொன்னார்.
மரண விசாரணை அதிகாரியின் முடிவு இன்னொரு தேதியில் அறிவிக்கப்படவிருக்கிறது.