சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் உச்சத்தைத் தொட்டு வந்தாலும் நோயாளி எண்ணிக்கையைச் சமாளிக்கும் ஆற்றல், நாட்டின் சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்புக்கு உள்ளதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார். இருப்பினும், தாதியரின் வேலைப் பளுவைக் குறைப்பதற்குத் தாதிமைத் துறையில் நிலவிவரும் மனிதவளப் பிரச்சினையை எதிர்கொள்வது அவசியம் என்றும் அவர் சுட்டினார்.
சிங்ஹெல்த் குழுமத்தின் தாதியர் தினக் கொண்டாட்டத்தில் நேற்று கலந்துகொண்டு பேசிய திரு ஓங், "மருத்துவமனை நிலவரம் எப்படி உள்ளது? அதிகமான வேலை ஆனாலும் சமாளிக்கும் வகையில் இருக்கிறது," என்றார்.
புதிதாக 6,175 கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் நேற்று முன்தினம் பதிவாகியிருந்தன. அத்துடன் மருத்துவமனையில் 738 கொவிட்-19 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிங்கப்பூரர்கள், வெளிநாட்டினர் எனப் பலதரப்பட்டோரைக் கொண்டதாக சிங்கப்பூரின் தாதியர் வட்டம் அமைந்துள்ளது. இதைக் குறிப்பிட்ட திரு ஓங், தாதியரின் வேலைப் பளுவைக் குறைப்பதற்கு மனிதவளத் தட்டுப்பாட்டை சமாளித்தாக வேண்டும் என்றார்.
கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட சுமார் 400 தாதியரை நோக்கி அவர், "தாதியர் இன்னமும் விடுப்பில் செல்லலாம். வேலைப் பளு காரணமாக யாரும் களைப்பு மிகுதியை உணரக்கூடாது என்பதை உறுதிசெய்வதே மிக முக்கியம். நீங்கள் உங்களது முக்கியமான பணியைத் தொடர்ந்து செய்வதை நாங்கள் உறுதிசெய்கிறோம்," என்றார்.
"வாரந்தோறும் அனைத்து மருத்துவமனைக் குழுமங்களிலும் பணியை விட்டு விலகுவோரின் விகிதத்தை நான் கண்காணித்து வருகிறேன். தற்போது அது நிலையாக உள்ளது. ஆண்டிறுதிவரை அவ்வாறே இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்குத்தான் நாங்கள் முன்னுரிமை தருகிறோம் என்பதை உறுதிபடக் கூறுவேன்," என்றார் திரு ஓங்.
சிங்ஹெல்த் குழுமத்தில் 11,700க்கும் மேற்பட்ட தாதியர் உள்ளனர். ஆகஸ்ட் 1ஆம் தேதி அனுசரிக்கப்படும் தாதியர் தினத்தை முன்னிட்டு குழுமம் நேற்று அதன் வருடாந்திர தாதியர் தினக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.
குழுமத்தின்கீழ் பணியாற்றும் தாதியர், தங்கள் படிப்பைத் தொடர்வதற்கு $5 மி. நன்கொடைத் திட்டம் ஒன்றை நேற்றைய நிகழ்வின்போது 'வீ அறநிறுவனம்' அறிவித்தது. இத்திட்டத்தின்வழி இளங்கலைப் பட்டம், பட்டத்துக்குப் பிந்திய பட்டயக்கல்வி, முதுகலைப் பட்டம், முனைவர் பட்டம் ஆகிய கல்வித் தகுதி பெற தாதியர் படிக்கலாம். அத்துடன் மின்னிலக்கமயம், தரவுப் பகுப்பாய்வு, புத்தாக்கம் போன்ற அம்சங்கள் தொடர்பான பாடங்களுக்கும் பயிற்சித் திட்டங்களுக்கும் நிதித் திட்டம் உதவும்.