ஜேடன் லார்சன் டன்னிங் ஒரு வித்தியாசமான இளையர்.
தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் விலங்குநலத் தொழில்நுட்பப் பிரிவில் இரண்டாம் ஆண்டு மாணவரான இவர், பதின்மவயதுகளின் தொடக்கத்திலிருந்தே தனது பிறந்தநாளை வெவ்வேறு விதமாகக் கொண்டாடி வருகிறார்.
ஒவ்வொன்றும் வித்தியாசமாக அமைந்தாலும் இவற்றில் அடிநாதமாக ஓர் ஒற்றுமையைக் காணமுடியும்.
எந்த எதிர்பார்ப்புமின்றி பிறர் நலன் பேணும் அம்சங்கள் இந்தக் கொண்டாட்டங்களில் இடம்பெற்றிருக்கும்.
எடுத்துக்காட்டாக, சென்ற ஆண்டு சிறப்புத் தேவையுடையோரை வேலைக்கு அமர்த்தியிருக்கும் சமூக நிறுவனத்திலிருந்து தனது பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு உணவை வாங்கினார்.
அதற்கு முன்னர் 2019ஆம் ஆண்டில் இவரது குடும்பத்தினர் இலங்கையில், வீதிகளில் காணப்படும் விலங்குகளுக்கான புகலிடத்தில் டன்னிங்கின் பிறந்தநாளன்று தங்கியிருந்தனர்.
அந்த வகையில், இந்த ஆண்டும் வித்தியாசமான அம்சத்தைத் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் புகுத்த இவர் தவறவில்லை.
ஞாயிற்றுக்கிழமையன்று (7 ஆகஸ்ட்) லிட்டில் இந்தியா வட்டாரத்தில் ரேஸ் கோர்ஸ் ரோட்டில் அமைந்திருக்கும் சகுந்தாலா‘ஸ் உணவகத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் 18 பேருடன் தனது 18வது பிறந்தநாளைக் கொண்டாடினார் டன்னிங்.
இதில் இவருடன் தாயார் கேரன் ஜுவானிடா லெட்சுமணன், நண்பர்கள், உறவினர்கள், தாத்தா- பாட்டியரும் கலந்துகொண்டனர்.
சில காலம் முன்பு, டன்னிங்கின் தாயார் ‘இட்ஸ்ரெயினிங்ரெயின்கோட்ஸ்’ எனும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யும் நிறுவனம் பற்றிக் கேள்விப்பட்டார்.
‘மக்கான் வித் மைக்ரண்ட் ஒர்க்கர்ஸ்’ எனும் இந்தத் திட்டத்தில் பங்களிக்க வாய்ப்பை எதிர்பார்த்திருந்த 45 வயது கேரன், மகனின் பிறந்தநாள் இதற்குப் பொருத்தமாக இருக்கும் என்று முடிவெடுத்ததாகக் கூறினார்.
வெளிநாட்டு ஊழியர்களுடன் கலந்து பழகுவது அப்படியொன்றும் சவாலான நடவடிக்கை அல்ல என்றார் திருவாட்டி கேரன்.
கொவிட்-19 கிருமிப்பரவலின் தொடக்கத்தில் தாயும் மகனும் பராமரிப்புப் பொட்டலங்களை வெளிநாட்டு ஊழியர்களுக்கு அனுப்பியதாகக் கூறினர்.
உணவுப் பொருள்களையும் உடல் தூய்மையைப் பேண உதவும் சவர்க்காரம், பற்பசை போன்றவற்றையும் இவர்கள் வழங்கினர்.