பணவீக்கம், வாழ்க்கைச் செலவு போன்ற உடனடி பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கு அப்பாலும் சிங்கப்பூர் நீண்டகாலத் திட்டங்களை வகுக்க வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் தனது தேசிய தின செய்தியில் வலியுறுத்தினார்.
கரையோரப் பூந்தோட்டங்களில் இருந்தபடி உரையாற்றிய பிரதமர், அந்த இடம் வெறும் கடற்கரையாக முன்பு இருந்ததைச் சுட்டினார். மரினா சவுத், புதிய நகரமையத்தை அமைக்க 50 ஆண்டுகளுக்கு முன் நிலமீட்பு நடவடிக்கை தொடங்கியது.
அப்படி அமையும் புதிய நகர மையம் வெறும் அலுவலகம், குடியிருப்புக் கட்டடங்களாக இருந்துவிடாமல் பசுமை இடங்களையும் கொண்டிருக்க வேண்டும் என்று திட்டமிட்டு, அதன் விளைவாக கரையோரப் பூந்தோட்டங்கள் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது என்பதை திரு லீ குறிப்பிட்டார்.
கரையோரப் பூந்தோட்டங்கள் 2012ல் திறக்கப்பட்டன.
அது முதல் சிங்கப்பூரர்கள் மனமகிழ்ச்சியாகப் பொழுதை கழிப்பதற்கும் பெருமை கொள்வதற்கும் உரிய ஓர் இடமாக அந்தத் தோட்டங்கள் திகழ்கின்றன.
விரைவில் 'பே ஈஸ்ட் கார்டன்' பணிகள் தொடங்கும். அங்கு நிறுவனர் நினைவிடம் அமையும் என்று திரு லீ குறிப்பிட்டார்.
இதுவே சிங்கப்பூரில் நாம் செயல்படும் முறை என்றார் அவர்.
அடுத்த ஐந்து அல்லது 10 ஆண்டுகளுக்கு என்று இல்லாமல் 30 முதல் 50 ஆண்டு காலத்திற்கும் அதற்கு அப்பாலும் நாம் திட்டமிட்டு செயல்படுகிறோம் என்றார்.
நகர மறுசீரமைப்பு ஆணையம், நீண்டகாலத் திட்ட மறுபரிசீலனை யைச் சென்ற ஆண்டு தொடங்கியது. அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு நாட்டை கொண்டு செல்வதற்கான யோசனைகளைப் பெறுவதற்காக அந்த மறுபரிசீலனையில் பரந்த அளவில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
நகர மறுசீரமைப்பு ஆணைய நிலையத்தில் இப்போது கண்காட்சி ஒன்று நடக்கிறது. அது பெரும் மேம்பாடுகளுக்கான கோட்பாடுகளை எடுத்துக்காட்டுகிறது.
அந்தக் கோட்பாடுகள் சிங்கப்பூரர்களின் ஒட்டுமொத்த கனவுகளையும் விருப்பங்களையும் பிரதிநிதிக்கின்றன என்றார் அவர்.
நீண்டகால திட்டங்கள் உள்கட்டமைப்பு வசதிகளுடன் நின்றுவிடுவதில்லை என்று கூறிய பிரதமர், பொருளியல் முன்னேற்றத்தையும் சமூக மீள்திறனையும் கட்டிக்காக்க வேண்டிய தேவை இருக்கிறது என்றார்.
ஒவ்வொரு தலைமுறையும் மேம்பட்ட இலக்குகளை துணிச்சலாக நிர்ணயிக்க வேண்டும்.
அந்த இலக்குகள் இன்னும் சிறந்த சிங்கப்பூரை உருவாக்க வேண்டும் என்றார் அவர்.
துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் அவருடைய நான்காம் தலைமுறை குழுவினரும் 'முன்னேறும் சிங்கப்பூர்' என்ற செயல்திட்டத்தை தொடங்கி உள்ளனர்.
அதில் கலந்துகொண்டு யோசனைகளைத் தெரிவித்து எதிர்கால சிங்கப்பூருக்கு உருகொடுக்க முன்வர வேண்டும் என்று திரு லீ சிங்கப்பூரர்களைக் கேட்டுக்கொண்டார்.