தங்கள் வீட்டு வரவேற்பு அறையில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தபோது தங்களது நான்கறை வீட்டின் ஓர் அறையில் தீப்பிடித்ததை உணர்ந்தனர் திரு சரவண மூர்த்தி, திருமதி லோலிட்டா எக்லேபியா தம்பதியர்.
உடனே திரு சரவணனும், 58, திருவாடு லோலிட்டாவும்,58 தங்கள் வீட்டு அறையில் ஏற்பட்ட தீயை 18 வயது மனனுடன் அணைக்க முயன்றனர். ஆனால் தீ கட்டுக்குள் அடங்காமல் அவர்கள் வீட்டை விட்டு வெளியேற நேரிட்டது.
தோ பாயோ லோரோங் 8, புளோக் 222ல் இருந்த அவர்களது வீட்டிலிருந்து அன்னை மேரி சிலை உட்பட கையில் கிடைத்த பொருள்களை எல்லாம் எடுத்துக்கொண்டு வெளியேறியதாக திருவாட்டி லோலிட்டா தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை(ஆகஸ்ட் 12) இரவு ஏற்பட்ட தீச்சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கிருந்த கிட்டத்தட்ட 50 பேர் வெளியேற்றப்பட்டனர்.
இரவு 8.20 மணியளவில் தீச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்தது என்றும் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்ததாகவும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது..
கட்டடத்தின் மூன்றாம் மாடியில் அடர்த்தியான கரும்புகை தென்பட்டதாக அது சொன்னது. தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் இரு இயந்திரங்களைக் கொண்டு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
புகையை சுவாசித்த ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். முன்னெச்சரிக்கையாக சுமார் 50 குடியிருப்பாளர்கள் கட்டடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.