தோ பாயோ லோரோங் 8ல் இருக்கும் புளோக் 222ல் மூன்றாவது மாடி நாலறை வீவக வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு நேரத்தில் தீ மூண்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புளோக்கிலிருந்து 50 பேரை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப்படையும் காவல்துறையும் அப்புறப்படுத்தின.
புகையைச் சுவாசித்ததற்காக ஒருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மற்றொருவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டார்.
இதனிடையே, அந்தத் தீ 30 நிமிடங்களுக்குள் அணைக்கப்பட்டுவிட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கப்படும் என்றும் பீஷான்-தோ பாயோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சக்தியாண்டி சுப்பாட் தெரிவித்தார். தீ விபத்துக்கான காரணம் பற்றி புலன்விசாரணை நடப்பதாக குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
அந்த புளோக்கில் குடி இருக்கும் திரு சரவண மூர்த்தி, 58, என்பவரின் வீட்டில் மூண்ட அந்தத் தீயை அணைக்க அந்த ஆடவரும் அவருடைய மனைவியும் 18 வயது மகனும் முயன்றனர்.
ஆனால், தீயை அணைக்க முடியாமல் போனதால் அவர்கள் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டனர்.