ஆரம்பகால பாலர்பருவ ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்க நடவடிக்கை
மகிழ்ச்சியான ஆசிரியருக்கும் மகிழ்ச்சியான சிறுவர்களுக்கும் தொடர்புண்டு. எனவேதான் ஆரம்பகால பாலர்பருவ ஆசிரியர்கள், வேலைப்பளுவைக் குறைத்து உற்பத்தித்திறனை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
"முக்கியமான இருதரப்பினரால்தான் நாம் அனைவரும் வாழ்வில் வெற்றி அடைகிறோம். ஒரு தரப்பினர் பெற்றோர், மற்றொரு தரப்பினர் ஆசிரியர்கள்," என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி செய்தியாளர்களிடம் நேற்று கூறினார்.
"நாம் செய்யும் விஷயங்களில் இவ்விரு தரப்பினரின் நலனிலும் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். ஏனெனில், ஓர் ஆசிரியர் மகிழ்ச்சியாகவும் நன்கு பயிற்சி பெற்றவராகவும் இருந்தால் மாணவர்கள் மகிழ்ச்சியாகவும் நன்கு வளர்ச்சி பெறுபவர்களாகவும் இருப்பர்," என்று அவர் மேலும் சொன்னார்.
பாலர் பள்ளி ஆசிரியர்களுக்காக ஆரம்பகால பாலர்பருவ மேம்பாட்டு வாரியத்தின் ஆசிரியர் தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, அங் மோ கியோவில் உள்ள 'லேர்னிங் கிட்ஸ்' பாலர் பள்ளிக்கு அமைச்சர் மசகோஸ் வருகையளித்தார்.
ஆரம்பகால பாலர்பருவ தொழில்துறை மின்னிலக்கத் திட்டத்தின் மூலம், ஆசிரியர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்க பாலர் பள்ளி நடத்துநர்களுடன் சேர்ந்து வாரியம் பணியாற்றி வருகிறது.
கடந்த ஆண்டு அக்டோபரில் $4 மில்லியன் மதிப்பில் ஆரம்பகால பாலர்பருவ மின்னிலக்கமயமாதல் மானியம் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, பாலர் பள்ளி நடத்துநர்களில் பாதிப் பேர் மின்னிலக்கத் தீர்வுகளைக் கடைப்பிடித்து வருகின்றனர்.
கூடுதலான தீர்வுகள் கட்டங்கட்டமாக சேர்க்கப்படும் என்று வாரியம் கூறியது. ஆசிரியர்களுக்கான மின்னிலக்க கற்றல் தளமும் அதில் அடங்கும்.
ஆசிரியர்களின் நலனுக்கு ஆதரவளித்து, வேலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் திட்டங்களை ஊக்குவிக்க, சுகாதார மேம்பாட்டு வாரியத்துடனும் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றத்துடனும் சேர்ந்து ஆரம்பகால பாலர்பருவ மேம்பாட்டு வாரியம் செயல்பட்டு வருகிறது.
இதுநாள்வரை கிட்டத்தட்ட 90 பாலர் பள்ளிகளைச் சேர்ந்த 5,500க்கும் அதிகமான ஊழியர்கள் சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் வேலையிடப் பாதுகாப்புத் திட்டங்களில் பங்கெடுத்துள்ளனர்.
வரும் நவம்பரில் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றம் பயிலரங்குகளுக்கு ஏற்பாடு செய்யும். பாதுகாப்பு, சுகாதார அபாயங்களை அடையாளம் கண்டு அவற்றைச் சமாளிக்க, பாலர் பள்ளி நடத்துநர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.
கொவிட்-19 நிலவரம் சீராகிவரும் வேளையில், பெரும்பாலான உட்புறங்களில் முகக்கவசம் அணிவது நேற்றுமுதல் கட்டாயம்இல்லை.
சுகாதார இரண்டாம் அமைச்சருமான திரு மசகோஸ், பள்ளியில் முகக்கவசம் அணியாமல் இருப்பதற்கும் கிருமித்தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கும் இடையே சமநிலை கடைப்பிடிக்குமாறு அனைவரிடமும், குறிப்பாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் வலியுறுத்தினார்.