உலகின் செம்மொழிகளான தமிழ், சீனம் இரண்டும் அரசமைப்புச் சட்டத்தின்படி அதிகாரபூர்வ ஆட்சி மொழிகளாக இருக்கும் அரிய பெருமை கொண்ட நாடு சிங்கப்பூர்.
ஆங்கிலத்தை முக்கிய பொது மொழியாகக்கொண்டு, அதோடு, மலாய் மொழியையும் அதிகாரபூர்வ மொழியாக அங்கீகரித்து, தாய்மொழிகள் புழங்கும் தனிச்சிறப்பு பெற்ற நாடாக சிங்கப்பூர் திகழ்கிறது.
சிங்கப்பூர் கல்வி முறை, இருமொழிக் கொள்கையை நிலைநாட்டி, மாணவர்களை ஆங்கிலத்தோடு தங்கள் தாய்மொழியையும் கற்க வழிவகுத்து, வலியுறுத்தி வருகிறது. கல்வி அமைச்சர் சான் சுன் சிங் இருமொழிக் கொள்கையின், தாய்மொழியின் முக்கியத்துவத்தை அண்மையில் தாய்மொழிகள் கருத்தரங்கு ஒன்றில் விளக்கினார்.
பொருளியல் ரீதியாக உலக மக்களுடன் நாம் உரையாடுவதற்கான அலுவல் மொழியாக ஆங்கிலம் அமைந்தாலும் தாய்மொழி நமது சிந்தனையை விரிவடையச் செய்வதோடு பரந்த மனப்பான்மையைத் தருகிறது என்றாரவர்.
நமது வேருடன் நம்மைப் பிணைத் திருப்பதுடன் சிங்கப்பூரர்கள் என்ற தனித்துவமான அடையாளமாக நம் இருமொழிக் கொள்கை இருக்கிறது என்று கூறிய திரு சான், பல்லினச் சமூகத்தில் தங்கள் பாரம்பரிய மரபுகளுடன் தங்களின் தாய்மொழியைப் போற்றும் மக்களாக சிங்கப்பூரர்கள் இருக்கவேண்டும் என்பதே நம் நோக்கம் என்றார்.
சிங்கப்பூர் தமிழர்கள், மகத்தான வரலாறும் தொன்மையான மொழிக் கூறுகளும் கொண்ட தமிழ்மொழியைத் தாய்மொழியாக இப்பிறவியில் பெற்றது நமது வரம் என்பதை அறியவேண்டும், உணரவேண்டும்.
அதோடு, தமிழைத் தொடக்கப் பள்ளி முதல் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்பு வரை படிப்பதற்கு வாய்ப்பு உள்ள, அதற்குப் பொருளியல் ஆதாயமும் இருக்கின்ற ஒரு நிலப்பரப்பில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதையும் நாம் உணரவேண்டும். தமிழின் அருமை பெருமைகளைச் சொல்லி வரும் நாம், அந்த மொழி நம் நாட்டில் தழைக்க ஆக்கபூர்வ முயற்சிகளையும் எடுக்கவேண்டும்.
தமிழின் சிறப்புகளை எடுத்துரைத்து இன்று வாட்ஸ்அப் வழி வரும் செய்திகள், காணொளிகள் உள்ளிட்ட தகவல்களைப் பெருமையுடன் அனைவருக்கும் பகிரும் நாம், அதைத் தாண்டி தமிழ்ப் புழக்கத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்தவேண்டும்.
தமிழ் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது, கலந்துகொள்வது என்பதோடு நின்று விடாமல், வீட்டில் நம் தமிழ்மொழி புழக்கத்தில் இருப்பது அடிப்படைத் தேவை, கட்டாயம் என்பதை உணரவேண்டும்.
ஒரு பொருளின் பயன்பாட்டை வைத்தே அதன் முக்கியத்துவம் இருக்கும். அதன் தேவையும் நிலைக்கும், அதிகரிக்கும். மொழிகள் அதற்கு விதிவிலக்கல்ல.
ஆகையால் எந்தெந்த வழிகளில், சூழல்களில் நம்மால் முடியுமோ தமிழ்மொழியைப் பயன்பாட்டில் வைத்திருப்பது அவசியம். பள்ளியில் கற்கும் பாடமாக கருதாமல் நம் வாழ்வின் அங்கமாக தாய்மொழி இருக்கவேண்டும் என்று அமைச்சர் திரு சான் வேண்டுகோள் விடுத்தார்.
ஆங்கிலத்தை முதன்மை மொழியாகக் கற்று அதனால் பொருளியல் ரீதியாக சிறந்த தொழில், வேலை வாய்ப்புகளை நாம் பெற்று வருகிறோம். அப்படி வெவ்வேறு துறைகளில் வெற்றிக்கொடி நாட்டிவரும் நாம், போகும் உச்சத்திற்குத் தமிழையும் கொண்டு செல்வது நம் கடமை. மருத்துவம், சட்டம், பொறியியல், வணிகம், வங்கித் துறை, தொழில்நுட்பம், அரசியல் என்று ஏராளமான துறைகளில் நம் சமூகத்தினர் முத்திரை பதித்து வருகின்றனர்.
பணி நிமித்தம் ஆங்கிலத்தில் உரை யாடி, அதைப் புழங்கி வந்தாலும் நம் அடையாளத்தின் மிக முக்கிய அங்கமான தமிழ்மொழியை இல்லத்தில், நண்பர்களிடத்தில், பொது இடங்களில், சமூக நிகழ்ச்சிகளில் பேசி உறவாடினால், அதுவே தமிழ் மொழியை நம் நாட்டில் செழிக்க செய்யும் முயற்சிகளில் மிக முக்கிய ஒன்றாக அமையும்.
தாய்மொழியை நாம் கடந்த 15 ஆண்டு களாக பள்ளிப் பருவத்தில் எவ்வாறு கற்று மதிப்பெண்கள் பெற்றோம் என்று அளவிடுவதை விட்டுவிட்டு, அடுத்த 50 ஆண்டுகளில் எப்படி பயன்படுத்துகிறோம் என்றே பார்க்கவேண்டும் என்று அமைச்சர் சான் அறிவுறுத்தி இருக்கிறார்.
இதற்கு சிறு வயதிலேயே தாய்மொழி வித்தூன்றவேண்டும் என்றார் அமைச்சர். தாய்மொழிகள் நம் நாட்டில் செழித்தோங்க அரசு எடுத்துவரும் முயற்சிகள் ஏராளம்.
சமூகத்தில் செயல்பட்டுவரும் மொழி, கலை, கலாசார அமைப்புகளும் தங்களால் முடிந்த அளவு தமிழை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்ல சேவையாற்றி வருகின்றன.
இருந்தாலும்கூட தமிழ்மொழியின் புழக்கம் குறைந்து வருவதைப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
நன்கு வடிவமைக்கப்பட்ட கல்விக் கொள்கை இருந்தபோதிலும் தமிழ்ப் புழக்கம் குறைந்து வருவது வருத்தமளிக்கக்கூடிய போக்கு.
தமிழ்மொழியை இரண்டாம் மொழியாக இன்று நாம் கற்றுவந்தபோதிலும் பள்ளிக்கூடத்திற்கு அப்பால் அதைப் பயன்படுத்தாத ஒரு நிலையே அதிகரித்து வருகிறது.
அந்த நிலை மாற, நாம் வீட்டில் தமிழ்மொழிப் புழக்கத்தை அதிகரிக்கவேண்டும். இந்தக் கருத்தும் பல ஆண்டுகளாக நாம் கேட்டு வந்த ஒன்றுதான் என்றாலும் அதை நாம் மீண்டும் புதிய கோணத்தில் பார்க்கவேண்டும்.
இன்று வீட்டில் பேரப்பிள்ளைகளோ, பிள்ளைகளோ ஆங்கிலத்திலேயே பேசுகிறார்கள் என்பதால் நாம் அவர்களிடத்தில் ஆங்கிலத்திலேயே பேசுகிறோம்.
குழந்தைகளுக்கு நாம் சொல்வது இன்னும் எளிதில் புரியும் என்று நினைத்து ஆங்கிலத்தில் பேசுவதைப் பழக்கமாக்கிக்கொண்டிருக்கிறோம்.
அந்த எண்ணம் மாறி, தமிழில் பேசி புழங்கி அவர்களுக்குப் புரிய வைக்கவேண்டும். சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பதைச் செயல்பாட்டில் காட்டவேண்டும்.
பிள்ளைகள் ஆங்கிலத்தில் உரையாடி னாலும் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா தமிழ்மொழியில் அவர்களுக்குப் பதில்சொல்லி வந்தால் மாற்றத்தைப் பார்க்கலாம். நாம் தமிழில் பேசினால் அவர்களும் தமிழில் பேசிவிடுவார்களா, என்ன என்று குழம்பிக்கொண்டிருக்காமல் முயற்சியைத் தொடர்வோம்.
பல இன நண்பர்கள் கொண்ட வட்டத்தில் தமிழில் பேச வாய்ப்பில்லாமல் இருக்கும் குழந்தைகளுக்குத் தமிழ் நண்பர்களைப் பார்க்கும்போது தமிழில் பேச ஊக்கமளிக்கவேண்டும். நம் இல்லத்தில் தமிழ் ஒலித்தால், அது பிள்ளைகள் உள்ளத்தில் தமிழ்ப் பற்றை விதைக்கும். நம் சமூகமெங்கும் தமிழ் எதிரொலிக்கும் சூழல் ஏற்படும்.