அண்மையில் திருமண பந்தத்தில் இணைந்த உள்ளூர் பிரபலங்களான சுதாஷினி ராஜேந்திரன், விஷ்ணு பாலாஜி ஆகிய இருவரும் இன்று தங்களின் தலை தீபாவளியை ஆரவாரமின்றி, மனநிறைவளிக்கும் வண்ணம் கொண்டாடத் திட்டமிட்டுள்ளார்கள். ஒரு தம்பதியாக தீபாவளியைக் கொண்டாடுவது இதுவே முதல் முறை என்பதால் சமூகத்திற்கு முடிந்தளவு ஏதேனும் ஒருவகையில் உதவ வேண்டும் என்ற ஆசை தமக்கு இருப்பதாகப் பகிர்ந்துகொண்டார் சுதாஷினி.
இதனால் விஷ்ணுவின் பெற்றோரது ஆசிர்வாதத்தைப் பெற்று, விருந்துண்ட பிறகு இருவரும் ராமகிருஷ்ண மிஷன் சிறுவர் இல்லத்திற்குச் செல்கிறார்கள். அதன் பின்னர் சுதாஷினியின் குடும்பத்தாருடன் தீபாவளிக் கொண்டாட்டம் தொடரும்.
தம்பதியர் தாங்களே தயாரித்த தீபாவளி அன்பளிப்புப் பைகளை ராமகிருஷ்ண மிஷன் சிறுவர் இல்லத்தில் கொடுக்கவுள்ளனர். இதற்கு முன்னதாகவே சுதாஷினி விஷ்ணுவுடன் சேர்ந்து அங் மோ கியோ வட்டாரத்திலுள்ள குறைந்த வருமான குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்புப் பைகளையும் சமையலுக்குத் தேவையான பொருள்களையும் வீட்டு அலங்காரங்களையும் கொடுக்க விரும்பினார். ஆனால் உடல் நலம் குன்றிய நிலையிலிருந்த விஷ்ணுவால் வரமுடியாமல் போய்விட்டது.
எனவே, இன்று ராமகிருஷ்ண மிஷன் சிறுவர் இல்லத்திற்குச் சென்று அங்குள்ளோருக்கு முடிந்தளவு தீபாவளிக் கொண்டாட்ட உணர்வை ஊட்ட ஆவலுடன் இருக்கிறார்கள் தம்பதியர். ஒவ்வோர் அன்பளிப்புப் பையிலும் பள்ளிக்குத் தேவையான பொருள்கள் உள்ளன.
“மக்களுக்காக பாடுவதையும் தாண்டி நாங்கள் தொண்டூழியம் புரிந்து சமூகத்திற்கு உதவுவது, எங்கள் திருமண வாழ்விற்கு நல்லதொரு தொடக்கமாக அமையும் என நம்புகிறேன்,” என்றார் விஷ்ணு.
தொடக்கப் பள்ளியில் பயிலும் காலத்திலேயே விஷ்ணுவும் சுதாஷினியும் ஒருவரை ஒருவர் பல்வேறு பாட்டுப் போட்டிகளில் சந்தித்து இருந்ததால் அப்போதே அவர்கள் நண்பர்களாகிவிட்டனர். ஆனால் பல ஆண்டுகளுக்குப் பிறகு, 2014ஆம் ஆண்டில் இருவரும் பிரதான விழாவில் மேடையில் பாடியபோதுதான் அவர்களுடைய நட்பு காதலாக மலர்ந்தது.
இசை அவர்களை இணைத்தது. இன்றும் அதே இசை தொடர்ந்து அவர்களது வாழ்வில் முக்கிய அங்கம் வகிக்கிறது.
திருமணத்திற்கு முன்னர் சுதாஷினியும் விஷ்ணுவும் தொலைக்காட்சிக்கென மட்டுமல்லாமல் பல
மேடைகளிலும் ஒன்றாகப் பாடி இருக்கிறார்கள், மக்களை ரசிக்க வைத்திருக்கிறார்கள். ‘முன்னேறு வாலிபா’ என்னும் உள்ளூர் பாடலை 2017ஆம் ஆண்டின் தேசிய தின அணிவகுப்பில் தங்கள் சொந்த பாணியிலும் பாடினார்கள். இருப்பினும் ஊடகத் துறையில் இருப்பதால் தங்களின் தனிப்பட்ட உறவை காப்பது அவசியம் என்று இருவரும் நம்பினர்.
பிரபலங்களாக இருப்பதால் கட்டொழுங்கை மறந்துவிடக்கூடாது என வலியுறுத்தும் இந்தத் தம்பதியர், ஒருவருக்கு ஒருவர் பக்கபலமாக இருப்பது மிக முக்கியம் என்றும் பகிர்ந்துகொண்டார்கள்.
மேலும், இருவரும் பாடும்போது சிறிதளவு போட்டித்தன்மை இருப்
பதும் நல்லதுதான் எனக் குறிப் பிடுகின்றனர். உதாரணத்திற்கு, சுதாஷினிக்கு ஒரு ‘பிருகா’ செய்ய முடிந்தால் அதை விஷ்ணுவும் செய்து பார்ப்பார். அதேபோல் சுதாஷினியும் விஷ்ணு பாடுவதை உன்னிப்பாகக் கவனித்து தாமும் அவர் பாடும் நுணுக்கங்களை உள்வாங்கி பாடிப் பார்ப்பார். இவ்வாறு இருவரும் ஒருவருக்கு ஒருவர் சவால்கள் விடுத்து தங்கள் திறன்களையும் வளர்த்துக்கொள்வதில் இன்பம் காண்கின்றனர்.
“உள்ளூரில் எங்களுக்குக் கிடைக்கும் ஆதரவுக்கு நன்றிக்
கடன் பட்டிருக்கிறோம். பிற்காலத்தில் எங்களுடைய பாடல்கள் உலகமெங்கும் ஒலிக்க நாங்கள் நிச்சயம் கடினமாக உழைப்போம்,” என்றார் சுதாஷினி.
‘வசந்தம் ஸ்டார்’ பாட்டுத்திறன் போட்டியில் 2011ஆம் ஆண்டில் வெற்றிவாகை சூடிய சுதாஷினி, சொந்தமாகப் பல பாடல்களைப் பாடி வெளியிடுவதுடன் தற்போது சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் ஊடகத் தயாரிப்பாளராகவும் பணிபுரிகிறார். ‘யார் அந்த ஸ்டார்’ போட்டியை 2007ஆம் ஆண்டில் வென்ற விஷ்ணு பாலாஜி, ‘கிரேட் ஈஸ்டர்ன்’ நிறுவனத்தில் காப்புறுதி, முதலீட்டு ஆலோசகராக இருக்கிறார். நேற்றிரவு ஒளிபரப்பான ‘அமர்க்கள தீபாவளி’ நிகழ்ச்சியில் பாடியதுடன் இத்தம்பதியர் இம்மாதம் முழுக்க தீபாவளியை முன்னிட்டு சமூக மன்றங்களிலும் மேடைகளிலும் பாடி மக்களை மகிழ்விக்க உள்ளனர்.