ஒரு செய்தியாளருக்கு இருக்க வேண்டிய
அடிப்படைப் பண்புகளைப் பற்றி தமிழ் முரசு
நடத்திய பயிலரங்குவழி மாணவர்கள் அறிந்து, கற்ற உத்திகளைக் கொண்டு நேர்காணலும் நடத்தினர். அவ்வாறு செயிண்ட் ஆன்ட்ரூஸ் தொடக்கக் கல்லூரி மாணவர்கள் நடத்திய நேர்காணலுடன் அவர்களின் படைப்புகளும் இவ்வார இளையர் முரசில் இடம்பெறுகின்றன.
முன்னாள் மாணவரான மருத்துவர் சமீருடன் ஒரு சந்திப்பு
கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு முன் செயிண்ட் ஆன்ட்ரூஸ் தொடக்கக் கல்லூரியில் தாம் படித்த நாட்களை எங்களோடு அமர்ந்தவாறு நினைவுகூர்ந்தார் ஊட்ரம் சமூக மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றும் திரு முகம்மது சமீர்.
இந்திய கலாசார மன்றத் தலைவராகப் போட்டிகளுக்குத் தயார் செய்த நினைவுகள்தான் முதலில் தம் மனதில் தோன்று
வதாக எங்களிடம் கூறினார். அக்காலத்தில் போட்டிகளுக்கு சக மாணவர்களுடன் சேர்ந்து பயிற்சி செய்ததைப் பற்றிப் பேசினார்.
"ஜூரோங் தொடக்கக் கல்லூரி நடத்திய வானவில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு குறும்படம் தயாரித்தல், 'ராப்' இசை பாடுதல், நகைச்சுவை உரையாடல் எனப் பல பிரிவுகளில் பரிசுகள் வென்றோம். அது ஓர் இனிய அனுபவமாகவும் சவால் நிறைந்த காலகட்டமாகவும் அமைந்தது. பல நாட்கள் இரவுவரை பயிற்சி செய்வோம். எனக்குத் தலைமைத்துவப் பண்பைக் கற்றுக்கொள்ளவும் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும் அதுவே முதல் வாய்ப்பாக இருந்தது. பிறரது திறன்களைக் கண்டறியவும் உதவியது. நான் நகைச்சுவை வேடம் ஏற்று நடித்தேன். நிகழ்ச்சியின் நோக்கம் தமிழின் மேன்மையை வலியுறுத்துவதாக இருந்தது," என்றார்.
செயிண்ட் ஆன்ட்ரூஸ் கல்லூரி ஆசிரியர்களைப் பற்றி பகிர்ந்து கொண்ட டாக்டர் சமீர், தனக்குள் பரந்துபட்ட சிந்தனையை விதைத்தவர்கள் அவர்கள் என்றார். கிணற்றுத் தவளையாக இல்லாமல் எல்லா நிலைகளிலும் மாணவர்கள் மேம்பட அவர்களின் அறிவுரைகளும் கற்பித்தல் முறைகளும் காரணமாக அமைந்ததாகக் குறிப்பிட்டார்.
"எளிதாகக் கிடைப்பதைப் பற்றிக்கொண்டு செல்வதில் கிடைக்கும் திருப்தியைவிட போராடிப் பெறுவதில்தான் அதிக மனநிறைவு கிடைக்கும்," என்றார் அவர்.
"மருத்துவப்படிப்பு எல்லா காலத்திலும் மாணவர்களால் விரும்பப்படும் ஒன்றாக உள்ளது. சமூக அக்கறைதான் இத்துறையைத் தேர்ந்தெடுப்பதற்குக் காரணம் என்று கருதுகிறேன்," என்று குறிப்பிட்டார் அவர்.
கல்லூரி நாட்களில் சிக்கலுக்குத் தீர்வு காண்பதில் இருந்த நாட்டமே பின்னாளில் தனக்கு ஒரு வாழ்க்கைப் பாடமாக மாறிவிட்டதென இவர் கருதுகிறார். மேலும், தொடக்கக் கல்லூரி காலத்தில் தான் மேற்கொண்ட தொண்டூழியப் பணிகள், தன்னுள் சேவை செய்யும் மனப்பான்மையை வளர்த்ததாகவும் இவர் குறிப்பிடுகிறார்.
இந்நிலையில், இயல்பாகவே உயிரியல் பாடத்தில் ஆர்வம், தான் மருத்துவத் துறையைத் தேர்ந்தெடுக்கக் காரணமானது என்கிறார்.
"என் கனவுகளை ஓரளவு நனவாக்கியிருந்தாலும் என் துறையில் மேலும் சாதிக்க விரும்புகிறேன்," என்று தமது லட்சியத்தைப் பகிர்ந்துகொண்டார் டாக்டர் சமீர்.
தன்முனைப்பு உரைகளைப் படிப்பதில் தமக்கு அதிக ஈடுபாடு உண்டென்றும் குறிப்பிட்டார். தமிழ்ப் பாடத்தில் எப்போதுமே தமக்குத் தனி நாட்டமுண்டு என்றும் தமிழ் வகுப்புகள் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்ததாக, மகிழ்வுடன் கற்றல் என்பதற்கு இலக்கணமாக அமைந்ததென்றும் குறிப்பிட்டுகிறார் இவர்.
விவாதங்களும் எதிர்வாதங்களுமாய் எப்போதும் வகுப்பை உயிரோட்டமாக வைத்திருப்பார் தமிழாசிரியர் முனைவர் ராஜகோபாலன் என்றார் சமீர். அதனால் தமிழ்ப் பாடம் சலிப்பு தட்டாமல் ஆர்வமூட்டும் வகையில் அமைந்திருந்ததாகவும் கூறினார்.
'வலி இல்லாமல் வழி இல்லை' என்பதற்கேற்ப உழைப்பில்லாமல் உயர்வில்லை என்ற எண்ணத்தை இளையர்கள் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்கிறார் சமீர். நல்ல தமிழில் உரையாடுவதில் தனக்கு எப்போதுமே தயக்கமில்லை என்றும் தமிழ் மொழி மீது இன்றளவும் அதிக ஈடுபாடு உண்டு எனவும் கூறுகிறார் இவர்.