அனுஷா செல்வமணி
சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவை ஒட்டி நடைபெற்ற இரண்டு கலந்துரையாடல்கள் மகாத்மா காந்தி பற்றியும் சிங்கப்பூர் உணவுக் கலாசாரம் பற்றியும் கருத்துப் பரிமாற்றங்களுக்கு வகைசெய்தது.
இரண்டு நிகழ்ச்சிகளும் சென்ற சனிக்கிழமை ஆசிய நாகரிக அரும்பொருளகத்தில் நடைபெற்றன.
முதலாவது, 'காந்தியும் நானும்: சுனில் கிருஷ்ணனுடன் ஒரு நேர்காணல்' எனும் நிகழ்ச்சி.
காந்தியைத் தந்தையாகக் கருதும் இவர், நவீன இலக்கியப் படைப்புகளில் அவரைக் கொண்டுவர முனைந்துள்ளார். இந்திய சுதந்திரத்துக்காகப் போராடிய நிலையில் காந்தியின் வாழ்க்கை ஒரு துயரக் காவியமாக இருந்தாலும் போராட்டத்தையே கலையாக மாற்றியவர் மகாத்மா காந்தி என்றார் திரு சுனில் கிருஷ்ணன். எழுத்துலகில் பல பரிமாணங்களைக் கொண்டுள்ள இவர், காந்தி குறித்த தனிப்பட்ட தகவல்களை வழங்கும் www.gandhitodaytamil.com எனும் இணையத்தளத்தின் ஆசிரியர்.
அந்தக் காலத்திலேயே பருவநிலை நெருக்கடியை அறிந்த காந்தியின் போராட்ட வழிமுறைகள், தனித்துவம் வாய்ந்தவை. அவருடைய உப்பு யாத்திரை, அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு என்று கூறும் இவரை, சிங்கப்பூர்க் கவிமாலை அமைப்பின் தலைவர் இன்பா நேர்காணல் செய்தார்.
மற்றொரு கலந்துரையாடல் நிகழ்ச்சி, சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்திற்கு நாட்டின் உணவுக் கலாசாரம் எவ்வாறு சுவையூட்டுகிறது என்பதை விரிவாக அலசியது. 'உணவு இன்றேல்: சிங்கப்பூர்த் தமிழ் வாழ்வும் இலக்கியமும்' எனும் தலைப்பிலான கலந்துரையாடலை சஜினி நாயுடு நெறிப்படுத்தினார். சிங்கப்பூர் எழுத்தாளர்கள் வசுந்தரா, முகமது காசிம் ஷாநவாஸ், முகமது அலி ஆகியோர் தங்கள் கருத்துகளைச் சுவைபட எடுத்துக்கூறினர்.
சிங்கப்பூரில் கிடைக்கும் உணவு, உணர்வுகளைத் தூண்டவல்லது. இந்தியா, மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து இங்கு வந்த நம் முன்னோர்கள் சமைத்து உண்ட உணவு வகைகள் இப்பொழுது, பல மாற்றங்கள் கண்டு நம் நாவில் தவழ்கின்றன என்றார் 'மாஸ்டர் செஃப் 2' போட்டியாளருமான வசுந்தரா.
சிங்கப்பூர் வந்த புதிதில் 'கோபி-ஓ' வாங்கும்போது, தவறுதலாக சிங்கப்பூரில் பேச்சுவழக்கில் கூறப்படும் 'கேப்போ' என்ற சொல்லைப் பயன்படுத்திக் கடைக்காரரின் கோபத்துக்கு ஆளான சம்பவத்தின் தூண்டுதலில் 'அயல் பசி' எனும் கட்டுரை வடித்த ஷாநவாஸ், இங்குள்ள அங்காடிக் கடைகளைத் தம் உரையில் நினைவூட்டினார். விதவிதமான உணவு வகைகளை வீட்டில் சமைத்துச் சாப்பிடுவதைபோன்ற சுவையில் அங்காடிக் கடைகளில் ருசிக்கலாம் என்றார் அவர்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை எழுதித் தயாரிக்கும் முகமது அலி, உணவு இல்லை என்றால், நம் இலக்கியம் என்ன ஆகும் என்பதைப் பற்றிக் கருத்துரைத்தார். உணவு பலதரப்பினரையும் நம் வாழ்வில் இணைக்கிறது என்றார் அவர்.
நம் உடலுக்கு அடிப்படையாகத் தேவைப்படும் அரிசி போல, உணவின்றி நாம் எவ்வாறு இணைய முடியும் என வினா எழுப்பியதுடன், உணவு இல்லாவிட்டால் நம் கலாசாரமும் அடையாளமும் அழிந்துவிடும் என்றும் அவர் எச்சரித்தார்.
வாழ்க்கையைப்போலவே இலக்கியத்திலும் தாக்கம் ஏற்படுத்துகிறது உணவு என்றனர் பங்கேற்பாளர்கள்.
படங்கள்: அனுஷா செல்வமணி