மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பிறகு சினம் தணியாத ஆடவர் 14வது மாடியில் இருந்து சைக்கிளை வீசியதற்காக அவருக்கு ஒரு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சுவா சூ காங் கிரசெண்ட் வட்டார வீட்டில் வசிக்கும் 26 வயது முகமது நூர் இஸுவான் நூர்தீன் மற்றவர்களின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் செயலைச் செய்ததை ஒப்புக்கொண்டார்.
சென்ற ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி மாலையில் நூருக்கும் அவரது மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, அவர்களது திருமண வரவேற்புக்கு எந்த ஆடையை அணிவது என்பதன் தொடர்பில் இருவரும் சண்டையிட்டனர்.
அதன்பிறகு சினத்துடன் வீட்டை விட்டு வெளியேறிய நூர், அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மஞ்சள் நிற சைக்கிளைக் கண்டார். கோப மிகுதியில் 25 கிலோகிராம் எடையுள்ள அந்த சைக்கிளைக் கீழே வீசினார். பொதுமக்களின் புகாரையடுத்து விசாரணை செய்த காவல்துறையினரிடம் நூர் முதலில் தான் அவ்வாறு செய்யவில்லை என்று பொய்யுரைத்ததாகக் கூறப்பட்டது.
மற்றவர்களின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு ஆறு மாதம் வரையிலான சிறைத்தண்டனையோ $2,500 வரையிலான அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.