சிங்கப்பூரின் சாங்கி அனைத்துலக விமான நிலையம், இந்த ஆண்டை வெற்றிகரமானதாக முடித்து ஆசிய பசிபிக் வட்டாரத்தின் ஆகப் பெரிய விமான நிலையமாக சாதனை நிகழ்த்தி இருக்கிறது.
மீட்சி எதிர்பார்க்கப்பட்டதைவிட மெதுவாக இருக்கும் என்ற போதிலும் அது இந்தச் சாதனையை நிகழ்த்தி உள்ளது.
சாங்கி விமான நிலையம் டிசம்பர் நடுப்பகுதியில் கையாண்ட பயணிகளின் வாராந்திர எண்ணிக்கை, கொவிட்-19க்கு முன்பிருந்த அளவில் 75%ஐ எட்டிவிட்டது. இந்த அளவு கடந்த மார்ச் மாதம் 18% ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சாங்கி விமான நிலையத்தின் நான்கு முனையங்களும் இப்போது செயல்படுகின்றன. அவை பயணிகளைச் சீரான எண்ணிக்கையில் கையாண்டு வருகின்றன.
முனையம் 4 செப்டம்பர் மாதம் திறக்கப்பட்டது. முனையம் 2ன் தெற்குப் பகுதி அக்டோபரில் செயல்படத் தொடங்கியது.
இவற்றின் காரணமாக சாங்கி விமான நிலையம் ஆண்டுக்கு 70 மில்லியன் பேரைக் கையாளக்கூடிய ஆற்றல் நிலைக்கு மீண்டும் திரும்பியது.
சாங்கி விமான நிலையத்தின் உலகத் தொடர்புகளைப் பொறுத்தவரை அவை கொவிட்-19க்கு முந்திய நிலையில் 82% அளவுக்கு இப்போது திரும்பிவிட்டன.
டிசம்பர் நிலவரப்படி 95 விமான நிறுவனங்கள் சாங்கி விமான நிலையத்தில் இருந்து 140 நகர்களுக்குச் சேவையாற்றின. அவற்றில் மூன்று ஆண்டுகளுக்கு முன் பயணிகள் செல்ல முடியாமல் இருந்த இந்தியாவின் புனே, மலேசியாவின் சிபு உள்ளிட்ட புதிய நான்கு இடங்களும் உள்ளடங்கும்.
எட்டு புதிய விமான நிறுவனங்களும் சேவைகளைத் தொடங்கின. இவை எல்லாம் சேர்ந்து ஆசியாவின் விமானப் போக்குவரத்து மையம் என்ற நிலையை சாங்கி விமான நிலையம் மீண்டும் எட்ட கைகொடுத்து இருக்கின்றன.
அனைத்துலக விமானப் பயணங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், ஆசிய பசிபிக் வட்டாரத்தில் சாங்கி விமான நிலையம்தான் முதலிடத்தில் இருக்கிறது.
மீட்சியைப் பொறுத்தவரை தென்கிழக்கு ஆசியாவின் சராசரி அளவைவிட சாங்கி 10% அதிகமாக முன்னிலையில் இருக்கிறது.
கொவிட்-19க்கு முன்பு இருந்த நிலையில் 69 விழுக்காடு அளவுக்கு சாங்கி நவம்பரில் திரும்பிவிட்டது.
சாங்கி விமான நிலையம் ஆசிய பசிபிக்கிலேயே ஆகப் பெரிய அனைத்துலக விமான நிலையமாக இந்த ஆண்டின் முடிவில் திகழும் என்பது பல மாதங்களுக்கு முன்பே தெள்ளத்தெளிவாகத் தெரியவந்துவிட்டது என்று சுயேச்சை பகுப்பாய்வாளரான பிராண்டன் சோபி கூறுகிறார். இதைப் பொறுத்தவரை கடந்த 2019ல் சிங்கப்பூர் 3வது இடத்தில் இருந்தது.
ஆசிய பசிபிக் வட்டாரத்திலேயே ஆகப் பெரிய அனைத்துலக விமான நிலையமாக சாங்கி இப்போது திகழ்கிறது. ஆனால், இதை வைத்து சாங்கிதான் ஆக அதிக வேகத்தில் மீட்சி கண்ட நிலையம் என்று கூறிவிட முடியாது.
தெற்கு ஆசியாவிலும் மத்திய ஆசியாவிலும் செயல்படும் சிறிய விமான நிலையங்கள் சாங்கியைவிட வேகமாக மீட்சி கண்டுள்ளன.
அதேபோல, தென்மேற்குப் பசிபிக்கில் செயல்படும் சிட்னி போன்ற ஒரு சில நிலையங்களும் வேகமாக மீட்சி கண்டுள்ளன. உலகளவில் துபாய் தான் தொடர்ந்து ஆக சுறுசுறுப்புமிக்க அனைத்துலக விமானநிலையமாக இருக்கிறது.
லண்டன், பாரிஸ் விமான நிலையங்கள் இதில் அடுத்தடுத்த இடங்களைப் பெறுகின்றன.
ஆசிய பசிபிக் வட்டாரமும் சிங்கப்பூரும் மீட்சி கண்டு வரும் போதிலும் இந்த ஆண்டு முழுவதுமே விமான நிறுவனங்களுக்கும் நிலையங்களுக்கும் தொடர்ந்து சிரமமான ஆண்டாகவே இருந்தது.
சென்ற ஆண்டின் ஜனவரி முதல் அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் சாங்கி விமான நிலையம் வழி வந்து சென்ற பயணிகளின் மொத்த எண்ணிக்கை 23.6 மில்லியனாகத்தான் இருக்கிறது. இது 2019ஆம் ஆண்டு அளவில் 42%தான்.