2022ஆம் ஆண்டின் நிலவரம் பற்றி வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தகவல்
அரசாங்க வாடகை வீடுகளில் வசித்த 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள், 2022ஆம் ஆண்டில் சொந்தமாக வீடு வாங்கியதாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தெரிவித்தது.
அவற்றில் சில குடும்பங்கள், இதற்காக ‘புதுத் தொடக்க வீட்டுத் திட்டம்’ என்ற மானியத் திட்டத்தைப் பயன்படுத்தின.
இத்திட்டம் 2016ஆம் ஆண்டில் தொடங்கிது. வாடகை வீடுகளில் வசிக்கின்ற, இளம் பிள்ளைகளுடன் கூடிய குடும்பங்கள் இரண்டாவது முறையாக வீடுவாங்க இது உதவுகிறது.
வாடகை வீடுகளில் வசித்து வந்த 7,800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 10 ஆண்டுகளில் வீடுகளைச் சொந்தமாக வாங்கி இருக்கின்றன. மேலும் 2,300 குடும்பங்கள் வீடுகளை வாங்க பதிவு செய்து உள்ளன.
சென்ற ஆண்டில் சொந்த வீடு வாங்கிய 700க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 10ல் ஏழு குடும்பங்கள் வீவகவிடம் இருந்து வீடு வாங்கின. மற்றவை மறுவிற்பனை வீட்டை வாங்கின.
ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு குடும்பங்கள் $80,000 வரை மானியம் பெற்றன.
பிப்ரவரியில் தொடங்கும் பிடிஓ வீடு விற்பனையில் இருந்து, வாடகைக் குடும்பங்கள், ‘புதுத் தொடக்க வீட்டுத் திட்டத்தைப் பயன்படுத்தி குறைந்த குத்தகைக் காலத்தைக் கொண்டுள்ள மூவறை வீட்டையும் வாங்கலாம்.
இப்போது இத்தகைய குடும்பங்களுக்கு ஈரறை நீக்குப்போக்கு வீடுகள் கொடுக்கப்படுகின்றன.
இத்திட்டத்தின்படி கிடைக்கும் வீடுகளின் குறைந்தபட்ச குடியிருப்புக் காலம் 20 ஆண்டுகள் ஆகும். இத்திட்டத்திற்கான மானியம் 2022 மே மாதம் முதல் $35,000லிருந்து $50,000க்கு அதிகரிக்கப்பட்டது.
இதனிடையே, வாடகை வீட்டில் வசிக்கும் குடும்பங்களில் பல குடும்பங்கள் சொந்த வீடு வாங்க விரும்புவதாகவும் ஆனால் பல சூழ்நிலைகள் காரணமாக அவற்றுக்கு அது பெரும் சவாலாக இருப்பதாகவும் தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் முகம்மது ஃபைசல் இப்ராகிம் குறிப்பிட்டார்.
அத்தகைய குடும்பங்களைச் சமூக இணைப்புச் செயல்திட்டத்தில் சேரவைத்தால் அதன் மூலம் அவர்களுக்கு நன்மை கிடைக்கும் என்று அவர் கூறினார்.