பிப்பிட் சாலையில் உள்ள வீவக வீட்டு வாசலில் தனிநபர் நடமாட்டச் சாதனம் ஒன்று தீப்பிடித்துக்கொண்டது.
வீவக புளோக் 94ல் கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 10) காலை இச்சம்பவம் நிகழ்ந்தது.
காலை 6.45 மணிக்குத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீ அணைக்கப்பட்டது.
இச்சம்பவத்தில் ஒருவர் கேகே மகளிர், சிறார் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
மின்சாரம் சார்ந்த காரணங்களால் சாதனம் தீப்பிடித்துக்கொண்டதாக முதற்கட்ட விசாரணை தெரிவித்தது.
இதே இடத்தில் சனிக்கிழமை (மார்ச் 11) மாலை இரண்டு தொண்டூழியர்கள் உணவு விநியோகித்துக்கொண்டிருந்தபோது பசியுடன் இருந்த சில பூனைகளைக் கண்டிருக்கின்றனர்.
அவை தீப்பிடித்த தனிநபர் நடமாட்டச் சாதனம் இருந்த வீட்டில் இருந்தவை எனக் கருதப்படுகிறது.
தொண்டூழியர்கள் அன்று மாலை அப்பகுதிக்குத் திரும்பி வந்தபோது தமது குடும்பம் 30 பூனைகளை வளர்ப்பதாகவும் தீ மூண்டதன் காரணமாக அவற்றைத் தத்துக்கொடுப்பது பற்றி யோசிப்பதாகவும் இளம் ஆடவர் ஒருவர் கூறியிருக்கிறார்.
இதைப் பற்றித் தாங்கள் அறிந்திருப்பதாக விலங்குநல மருத்துவச் சேவையும் பூனைநல அமைப்பும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தன.