ஜூரோங் காவல் நிலைய தலைமையகத்தில் பணியாற்றிய முன்னாள் முழுநேர தேசிய சேவையாளர் ஒருவர் பலமுறை போலி மருத்துவச் சான்றிதழ்களைப் பயன்படுத்தி வேலைக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.
2021அம் ஆண்டு நவம்பருக்கும் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்கும் இடையே முஹம்மது அயூப் முகம்மது ரஃபி இந்தக் குற்றங்களைப் புரிந்ததாகச் சொல்லப்படுகிறது.
2022ஆம் ஆண்டு அக்டோபர் ஆறாம் தேதி தேசிய சேவையை முடித்த 21 வயது அயூப், சிறப்புக் காவலராகப் பணியாற்றியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்வி ஒன்றுக்குக் காவல்துறை பதிலளித்தது.
வியாழக்கிழமையன்று நீதிமன்றத்தில் அவர்மீது நான்கு மோசடி குற்றச்சாட்டுகளும் ஒரு ஏமாற்றுக் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது.
2021ஆம் ஆண்டு நவம்பரில் ஜூரோங் காவல்நிலைய தலைமையகத்தில் பணியாற்றியபோது அவர் மோசடி மருத்துவச் சான்றிதழ்களைப் பயன்படுத்தினார் என்று சொல்லப்படுகிறது.
நவம்பர் 10 முதல் 11 வரை அவர் வேலை செய்யத் தகுதியற்றவர் என்று குறிப்பிடப்பிட்டிருந்த நுஹெல்த் மருத்துவ நிலையத்தில் பெறப்பட்டதுபோன்ற மருத்துவச் சான்றிதழை அவர் சமர்ப்பித்ததாகவும் கூறப்படுகிறது.
2021ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2022ஆம் ஆண்டு மார்ச் வரை அவர் இதேபோன்று நான்கு குற்றங்களைப் புரிந்துள்ளார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மற்றொரு நிலவரத்தில் ‘ஃபுட்பாண்டா சிங்கப்பூர்’ உணவு விநியோகிக்கும் நிறுவனத்தில் உணவு விநியோகிப்பாளராக சேர தன்னை மற்றொரு நபராகக் காட்டிக்கொண்டு அவர் ஏமாற்றினார் என்று கூறப்படுகிறது.
வரும் ஜூலை 19ஆம் தேதி அயூப் தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.