பொதுமக்கள் கூர்ந்து கவனிப்பதால் ஏற்படக்கூடிய நெருக்குதல்கள் இருந்தாலும் நேர்மையாகவும் நம்பிக்கையுடனும் பணியாற்ற வேண்டும் என்று பொதுச் சேவையைச் சேர்ந்த 153,000 ஊழியர்களிடம் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
அண்மையகால நிகழ்வுகளால் சில பொதுச் சேவை ஊழியர்கள் பொதுமக்கள் தங்களைக் கூர்ந்து கவனிப்பதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் எனத் தெரியாமல் இருக்கலாம். அவர்கள் தங்கள் பணியில் உண்மையுடன் நடந்துகொள்ளும் வரை அவர்களுக்கு முழு ஆதரவு வழங்கப்படும் என்று அவர் உறுதி கூறினார்.
உங்கள் பணியில் நீங்கள் சிரத்தையுடன், உண்மையாக, நம்பிக்கையுடனும் நேர்மையுடனும் செயல்பட்டால், நீங்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை,” என்று திரு சான் தெரிவித்தார்.
பொதுமக்கள் தங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என பொதுச் சேவை ஊழியர்கள் எப்பொழுதும் அச்சத்துடனேயே இருந்தால், பொதுச் சேவை முறையாக செயல்பட முடியாது என்றும் அவர் விளக்கினார்.
பொங்கோல் ஒன் நிலையத்தில் புதன்கிழமையன்று நடைபெற்ற ‘பப்ளிக் சர்விஸ் வீக் 2023’ என்ற பொதுச் சேவை நிகழ்ச்சியில் அமைச்சர் சான் உரையாற்றினார்.
இந்த நிகழ்வில் பொதுச் சேவை ஊழியர்கள் பாரம்பரியமாக செய்து வந்த கடமைகளையும் முகவைகள் வகுத்துள்ள எல்லைகளையும் பொதுமக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று ‘பப்ளிக் சர்விஸ் ஃபார் குட்’ என்ற புதிய இயக்கத்தைத் தொடங்கி வைத்து அமைச்சர் சான் கூறினார்.
இதில் கூடுதலான மக்களுக்கு நன்மை செய்யும் எண்ணத்தில் தங்கள் தகுதியையும் நட்பு வட்டத்தையும் பயன்படுத்த பொதுச் சேவை ஊழியர்கள் எடுக்கும் முயற்சிகளை தான் கவனித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
“இது பொதுச் சேவையில் உள்ள பொதுமக்கள் சார்ந்த உணர்வைப் பிரதிபலிக்கிறது. அதனால்தான், இவ்வாண்டு, இன்றைய தினம், நாம் ‘பப்ளிக் சர்விஸ் ஃபார் குட்’ இயக்கத்தை தொடங்குகிறோம்” என்று அவர் கூறினார்.
இந்த இயக்கத்தின்கீழ் பொதுச்சேவை ஊழியர்களுக்கு ஆண்டுக்கு தங்களை தனிப்பட்ட முறையிலும் நிபுணத்துவ திறனை மேம்படுத்திக் கொள்ளவும் 40 மணிநேரம் ஒதுக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த நேரத்தைப் பயன்படுத்தி அவர்கள் மற்றவர்களுக்கு பயிற்சி அளிப்பது, வேறொரு நிறுவனத்துக்கு உதவுவது போன்ற செயல்களில் ஈடுபடலாம் என்று கல்வி அமைச்சர் விளக்கினார்.