முக்கிய அமைப்புகளில் செய்யப்படும் பெரிய முதலீடுகளை நிர்வகிப்பதற்கான வழிமுறைகளை சிங்கப்பூர் ஆராய்வதாக வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் திங்கட்கிழமை தெரிவித்தார்.
தேசிய சொத்துகளையும் முக்கியத் தொழில்துறைகளையும் பாதுகாப்பதற்காக, அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் வெளிநாட்டு முதலீடுகளுக்கு வரம்பு விதிக்க முற்படுகையில் சிங்கப்பூர் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
“தொழில்நிறுவனங்கள் நம்பிக்கையுடன் முதலீடு செய்யக்கூடிய நம்பகமான மையமாக சிங்கப்பூரின் நிலைப்பாட்டை நாம் வலுப்படுத்தவேண்டும். அதற்காக, முக்கிய அமைப்புகளில் செய்யப்படும் முதலீடுகள் சிங்கப்பூரின் பொருளியல் மீள்திறனையும் நமது தேசியப் பாதுகாப்பையும் பாதிக்காதிருப்பதை நாம் உறுதி செய்யவேண்டும்,” என்றும் திரு கான் குறிப்பிட்டார்.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் சங்கத்தில் நடைபெற்ற வர்த்தக, தொழில் அமைச்சின் பொருளியல் உரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, திரு கான் செய்தியாளர்களிடம் பேசினார்.
சிங்கப்பூரில், ஒருசில துறைகள் தவிர, மற்ற துறைகளில் வெளிநாட்டு முதலீடுகளுக்குக் குறைவான கட்டுப்பாடுகளே உள்ளன.
நிலச்சொத்து, ஒளிபரப்பு, உள்நாட்டு ஊடகம் ஆகிய துறைகளில் நேரடியான வெளிநாட்டு முதலீடுகளுக்குச் சட்டபூர்வக் கட்டுப்பாடுகள் நடப்பில் உள்ளன.
தொலைத்தொடர்பு, நிதிச் சேவைகள், வங்கித்துறை, சட்டத்துறை, கணக்கியல்துறை போன்றவை உரிமம்வழி நிர்வகிக்கப்படுகின்றன. இந்தத் துறைகளில் முதலீடு செய்ய விரும்புவோர், பொறுப்பமைப்புகளிடம் அனுமதி பெறவேண்டும்.
தொழில்நிறுவனங்கள், முதலீடுகள் மீதான பாதிப்பை முடிந்தவரை குறைக்கும் வகையில், தொழில்துறைகளின் ஈடுபாட்டுடன் அரசாங்கம் செயல்படும் என்று திரு கான் கூறினார்.