பெய்ஜிங்: உலகப் பொருளியல் நிலவரத்தின் நிச்சயமற்ற நிலையிலும் சிங்கப்பூரும் சீனாவும் இன்னும் அதிகமானவற்றை உள்ளடக்கிய, மீள்திறன் கொண்ட விநியோகத் தொடரை இணைந்து உருவாக்க இயலும் என்று பொதுச் சேவைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்து உள்ளார்.
சீனாவின் பெய்ஜிங் நகரில், தலைமைத்துவம் மீதான சிங்கப்பூர்-சீன கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.
அண்மையில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தி உள்ள இரு நாடுகளும், சேர்ந்து பணியாற்றுவதற்கு ஏற்ற புதிய, வலுவான வழிவகைகளைக் கண்டறியும் என்றார் திரு சான்.
கிழக்கு வட்டார மற்றும் மேற்கத்திய நாடுகளை இணைக்கும் பொருளியல் பாலமாக சிங்கப்பூர் உருவெடுக்கும் நிலையில், இருதரப்பும் தங்களது பங்காளித்துவத்தை வலுப்படுத்திக்கொள்ள இயலும் என்றார் அவர்.
மேலும் அவர் தமது உரையில் குறிப்பிடுகையில், “சரக்குப் போக்குவரத்து, மக்களின் பயணம் மற்றும் சேவைகளுக்கு உதவக்கூடிய எல்லா அம்சங்களை உள்ளடக்கிய, மீள்திறனுடனான விநியோகத் தொடரை உருவாக்க சிங்கப்பூரும் சீனாவும் பங்காளித்துவம் செய்துகொள்ள இயலும்.
“அத்துடன், ஒருங்கிணைந்த உலகப் பொருளியலுக்குத் தேவைப்படும் உயர்தரத்தைக் கட்டிக்காக்கவும் இரு நாடுகளும் சேர்ந்து செயலாற்றலாம்.
“மின்னிலக்கமயம், நீடிக்கும் நிலைத்தன்மை போன்றவற்றில் புதிய வாய்ப்புகளை முன்கூட்டியே கைப்பற்றக்கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும். நமது பங்காளிகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.
“இரு நாட்டு அரசாங்கத் திட்டங்களில் இணைந்து செயல்படுவது என்பது காலம் காலமாக உருவாக்கப்பட்ட ஓர் ஏற்பாடு. இதன் அடிப்படையில் தங்களது வளர்ச்சிக்கான தேவைகளுக்கு ஏற்ப சிங்கப்பூரும் சீனாவும் சேர்ந்து பணியாற்றி உள்ளன.
“1994ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சுஸு தொழிற்பேட்டை, 2007ஆம் ஆண்டு செயல்படத் தொடங்கிய தியான்ஜின் சுற்றுச்சூழல் நகரம் ஆகியன அவற்றுள் அடங்கும்.
“தொடர்ந்து, 2015ஆம் ஆண்டின் சோங்குயிங் இணைப்புத் திறன் நடவடிக்கை போன்ற வட்டாரத் திட்டங்களும் இணைந்து பணியாற்றியவற்றில் உள்ளடங்கும்,” என்று விளக்கினார் அமைச்சர் சான்.
சீனா சென்றுள்ள கல்வி அமைச்சருமான திரு சான், சீன அமைச்சர் திரு லி கன்ஜீயுடன் இணைந்து கருத்தரங்கை ஏற்று நடத்தினார்.