சிங்கப்பூரர்களுக்கு இந்த ஆண்டில் காற்றுத் தூய்மைக் கேட்டுத் தொல்லை இராது என்று கணிக்கப்படுகிறது.
மழை, ஈரப்பத பருவநிலை வருகிறது என்று வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
எல் நினோ பருவநிலை குறைந்தபட்சம் 2024 தொடக்கம்வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளையில், அது எவ்வளவு காலம் நீடிக்கும், அடுத்த ஆண்டில் தூசு மூட்டத்தைப் பொறுத்தவரை அது தாக்கத்தை ஏற்படுத்துமா ஏற்படுத்தாதா என்பது இன்னமும் நிச்சயமாகத் தெரியவில்லை என்றும் நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அக்டோபர் பிற்பகுதியில் தொடங்கி நவம்பர் வரை நீடிக்கும் இடை பருவமழைக் கால கட்டத்தில் காற்று இலேசாகும், மாறுபடும். மழை அதிகம் பெய்யும்.
குறிப்பாக வரும் வாரங்களில் ஈரப்பத பருவநிலை நிலவும். அதனால் எல்லை கடந்து தூசு மூட்டம் பரவுவது தடைபடும் என்று வானிலை ஆய்வு நிலையம் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு ஜூன் தொடங்கி அக்டோபர் வரைப்பட்ட தென்-மேற்குப் பருவமழை காலத்தில் அதிக தூசு மூட்டத்திற்கு வாய்ப்பு உண்டு.
அந்தக் காலத்தில் இந்த வட்டாரத்தில் வறட்சியான பருவநிலை நிலவும்.
சிங்கப்பூரில் இந்த ஆண்டில் இதுவரை அக்டோபர் 7ஆம் தேதி ஒருநாளில் மட்டும்தான் காற்றுத்தரம் கெட்ட நிலையில் இருந்தது.
சிங்கப்பூரில் இடியுடன் மழை பெய்யத் தொடங்கிவிட்டது. அடுத்த சில நாட்களில் அதிக மழை பெய்யும் என்று முன்னுரைக்கப்பட்டு இருக்கிறது.
இதன் காரணமாக இந்த வட்டாரத்தில் புகை கிளம்பக்கூடிய இடங்களால் பிரச்சினை குறைந்துவிடும் என்று ஆய்வு நிலையம் தெரிவித்தது.