பாலர் பள்ளிகளில் பயிலும் குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் எண்ணிக்கை தேசிய சராசரி அளவைக் காட்டிலும் குறைவாக இருந்தபோதும் கடந்த ஆண்டுகளைவிடக் கூடியிருக்கிறது.
2021ஆம் ஆண்டில் குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த மூன்று முதல் நான்கு வயதான பிள்ளைகளில் 78 விழுக்காட்டினர் மட்டுமே பாலர் பள்ளிகளில் பயின்றனர். அந்த வயதுப் பிரிவில் மற்ற குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளில் 88 விழுக்காட்டினர் பாலர் பள்ளிகளில் பயின்றனர்.
அதே ஆண்டில் ஐந்து முதல் ஆறு வயதான பிள்ளைகளில் 95 விழுக்காட்டினர் பாலர் பள்ளிகளில் பயின்றனர். ஆனால் குறைந்த வருமானக் குடும்பங்களில் அத்தகையோரின் எண்ணிக்கை 93 விழுக்காடு மட்டுமே.
ஒட்டுமொத்தத்தில் 2021ஆம் ஆண்டில் சிங்கப்பூரர்களான மூன்று முதல் ஆறு வயதான குழந்தைகளில் 92 விழுக்காட்டினர் பாலர் பள்ளிகளில் பயின்றனர். ஒப்புநோக்க 2017ல் அந்த எண்ணிக்கை 88 விழுக்காடு.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் அந்தத் தகவல்களைத் தெரிவித்தது.
அமைச்சிடம், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கான வருடாந்தரத் தகவல்களைக் கேட்டது ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ். ஆனால், 2021ஆம் ஆண்டுக்கான எண்ணிக்கைதான் புள்ளிவிவரத் துறையிடம் உள்ள ஆக அண்மைத் தகவலகள் என்று அமைச்சின் பேச்சாளர் கூறினார்.
தேசிய சராசரி விகிதத்தைப்போலவே, பாலர் பள்ளிகளில் பயிலும் குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் எண்ணிக்கை காலப்போக்கில் அதிகரித்து வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
2023ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரையில் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், பாலர் பள்ளி சேர்க்கையில், அரசாங்க வாடகை வீடுகளில் வசிக்கும் பிள்ளைகளுக்கும் தேசிய சராசரி அளவிற்கும் இடையிலான இடைவெளி குறித்துக் கூறியிருந்தார்.
குறைந்த வருமானக் குடும்பக் குழந்தைகளுக்குக் கூடுதல் உதவி வழங்கவும் அவர் உறுதி தெரிவித்திருந்தார்.
அக்டோபர் மாதம் திரு வோங் வெளியிட்ட முன்னேறும் சிங்கப்பூர் அறிக்கையிலும் இந்த இடைவெளியைக் குறைக்கும் முயற்சிகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குழந்தையின் வளர்ச்சியில் தொடக்க ஆண்டுகள் முக்கியமானவை என்றும் பாலர் பள்ளிகள் அதற்கு முக்கியப் பங்காற்றுகின்றன என்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டார்.
நடைமுறைச் சிக்கல்களால் சில பெற்றோர் பாலர் பள்ளிக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை.
இந்நிலையில், குறைந்த வருமானக் குடும்பங்களில், பெற்றோர் மூன்று வயதில் தங்கள் குழந்தைகளைப் பாலர் பள்ளிகளில் சேர்ப்பதை ஊக்குவிக்க அரசாங்கம் சமூகத்துடன் அணுக்கமாகப் பணியாற்றுவதாக அவர் சொன்னார்.
‘கிட்ஸ்டார்ட்’, பாலர் பள்ளி ‘அவுட்ரீச்’ திட்டம் போன்ற திட்டங்களை அவர் சுட்டினார்.
பாலர் பள்ளிக் கல்வியைக் கட்டாயமாக்குவதைவிட, குறைந்த வருமானக் குடும்பங்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களைச் சமாளிக்கும் அணுகுமுறையை அரசாங்கம் பின்பற்றுவதாக அமைச்சின் பேச்சாளர் கூறினார்.
எளிதில் அணுகக்கூடிய வகையில், கட்டுப்படியானதாக, தரமான பாலர் பள்ளிச் சேவைகளை வழங்க அரசாங்கம் முனைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.