சிங்கப்பூரில் குடும்பங்களின் வருமானமும் சொத்துகளின் மதிப்பும் கூடியிருப்பதால் சட்ட உதவி பெறுவதற்கான தகுதி வரம்பை சட்ட அமைச்சு மாற்றி அமைக்க உள்ளது.
சட்ட அமைச்சுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ரஹாயு மஹ்ஸாம் நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இதனைத் தெரிவித்தார்.
சட்ட அமைச்சின் வரவுசெலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், மாற்றங்களை இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் நடைமுறைப்படுத்துவதற்கான பணிகளில் அமைச்சு ஈடுபட்டு வருவதாகக் கூறினார்.
சிவில் வழக்குகளிலும் குற்றவியல் வழக்குகளில் தற்காப்பு வாதத்திற்கும் சட்ட உதவி மூலம் மேலும் அதிகமானோர் பலனடைய இந்த தகுதிவரம்பு மாற்றங்கள் கைகொடுக்கும் என சட்ட அமைச்சு தெரிவித்து உள்ளது.
அதன்படி, குற்றவியல் தற்காப்பு வாதங்களுக்கு உதவிபெற தனிநபர் குடும்ப வருமானம் $1,500 என்று இருப்பது $1,650ஆக உயர்த்தப்படும். இந்த உதவி வழங்கலை அரசாங்க தற்காப்புவாத அலுவலகம் நிர்வகிக்கிறது.
அதேபோல, சிவில் வழக்குகளுக்கான சட்ட உதவி பெறுவதற்கான தனிநபர் குடும்ப வருமான வரம்பு $950லிருந்து $1,050 ஆக உயர்த்தப்பட உள்ளது. இந்த உதவி வழங்கலை சட்ட உதவி அலுவலகம் நிர்வகிக்கிறது.
அதேபோல, இவ்விரண்டு உதவிகளைப் பெற, குடியிருப்புச் சொத்தின் வருடாந்திர மதிப்பு $13,000லிருந்து $21,000க்கு கூட்டப்படுகிறது.
சமூக உதவித் திட்டங்களின் பலன்களைப் பெறுவதற்கான தகுதிவரம்பை நிதி அமைச்சு உயர்த்தியதற்கு ஏற்ப இந்த மாற்றம் செய்யப்பட உள்ளதாக திருவாட்டி ரஹாயு கூறினார்.
இந்த மாற்றங்கள் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் அனைத்து வீடுகளுக்கும் பொருந்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
சட்ட அமைச்சின்கீழ் செயல்படும் தற்காப்புவாத அலுவலகம், வருமான அடிப்படையில் கீழ்நிலையில் உள்ள 35 விழுக்காட்டு குடும்பங்களைச் சேர்ந்த சிங்கப்பூர் குடிமக்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் சேவையாற்றுகிறது.
இந்த அலுவலகம் வழங்கும் உதவி சில வகைக் குற்றங்களுக்குப் பொருந்தாது.
சூதாட்டம், திட்டமிட்ட குற்றச்செயல், பயங்கரவாதம் போன்றவை உள்ளிட்ட சில குற்றங்களுக்கு சட்ட உதவி கிடைக்காது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.