தாங்கள் வழங்கும் போக்குவரத்துச் சேவைகளில் இடையூறு ஏற்பட்ட ஒரு மணிநேரத்துக்குள் டாக்சி நிறுவனங்களும் தனியார் வாடகை வாகன நிறுவனங்களும் பயணிகள், ஓட்டுநர்கள், நிலப் போக்குவரத்து ஆணையம் என மூன்று தரப்புக்கும் தெரியப்படுத்தவேண்டும்.
புதிதாக அறிவிக்கப்படவுள்ள கட்டுப்பாடுகளில் இது அடங்கும். ஓரிடத்திலிருந்து மற்றொன்றுக்குப் பயணிகளைக் கொண்டு செல்லும் போக்குவரத்துச் சேவைகளை அதிகாரிகள் பரிசீலனை செய்து வருகின்றனர். அதன்கீழ் புதிய விதிமுறைகள் அறிவிக்கப்படவுள்ளன.
சிங்கப்பூரில் டாக்சிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதனால் டாக்சி நிறுவனங்கள் இயங்குவதற்கான கட்டணங்களையும் டாக்சி ஓட்டுநர்கள் செலுத்தவேண்டிய வாடகையையும் குறைக்க விதிமுறைகள் மாற்றப்படும்.
அதோடு, மின்சாரத்தில் இயங்காத டாக்சிகளின் பயன்பாட்டுக் காலம் எட்டிலிருந்து 10 ஆண்டுகளுக்கு அதிகரிக்கப்படும்.
இத்தகைய விதிமுறைகள் எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் குறிப்பிட்டது. புதிய விதிமுறைகளைக் கருத்தில்கொண்டு டாக்சி நிறுவனங்களும் வாடகை வாகன நிறுவனங்களும் உரிமங்களை நீட்டிக்க அவற்றுடன் இணைந்து செயல்படப்போவதாக ஆணையம் தெரிவித்தது.