சிங்கப்பூர் ஊழியர் அணி அமைப்பின் 10 வேலை, திறன் நிலையங்கள், இரண்டு வாழ்க்கைத்தொழில் நிலையங்கள் ஆகியவற்றை வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) வேலை வாய்ப்பு, வேலை தகுதிக் கழகம் (இ2ஐ) நிர்வகிக்கும் என அவ்விரு அமைப்பும் இணைந்து திங்கட்கிழமை வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.
இதன்மூலம், 22 வேலை, திறன் நிலையங்களையும் நான்கு வாழ்க்கைத்தொழில் நிலையங்களையும் இ2ஐ நிர்வகிக்கும் என்றும் அவை குறிப்பிட்டன.
பாய லேபாரில் இருக்கும் வாழ்நாள் கற்றல் கழகத்தில் அமைந்துள்ள வாழ்க்கை தொழில் இணைப்பு நிலையம், அதனுடன் தொடர்புடைய நடமாடும் கலைக்கூடம் அடிப்படையிலான ‘கெரியர்ஸ் கொனெக்ட் ஆன் தி கோ’ ஆகியவற்றை சிங்கப்பூர் ஊழியர் அணி அமைப்பு நிர்வகிக்கும்.
உள்ளூர் பணியாளர்கள், வேலை தேடுபவர்கள் ஆகியோருக்கு ஏற்ற வாழ்க்கை தொழில் சேவையை இ2ஐ திறம்பட வழங்கவும் மேலும் இ2ஐ யில் சேவையை விரிவுபடுத்தி அதை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்மூலம், சிங்கப்பூரின் வேலை சூழல் அமைப்பிற்குத் தேவையான உத்திபூர்வமான மாற்றத்தை சிங்கப்பூர் ஊழியர் அணி அமைப்பு உருவாக்க முடியும்.
“சிங்கப்பூர் ஊழியர் அணி அமைப்பின் குறிப்பிட்ட சில செயல்பாடுகளை இ2ஐயிடம் ஒப்படைப்பது மூலம் பங்குதாரர்கள், தொழிலாளர் சந்தை இடைத்தரகர்கள் ஆகியோருடன் இணைந்து அமைப்பு திறம்பட பணியாற்ற முடியும். இதன்மூலம், வாழ்க்கைத் தொழில் வசதிக்கான சூழலை அமைப்பு வலுப்படுத்த முடியும். இது அமைப்பை ஒருபடி முன்னேற்றுவதற்கான நடவடிக்கை,” எனச் சிங்கப்பூர் ஊழியர் அணி அமைப்பும் தேசிய தொழிற்சங்க காங்கிரசும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் எடுத்துரைத்தன.
மேலும், “இந்த மாற்றத்தின் மூலம் சிங்கப்பூர் உள்ளூர் பணியாளர்களின் வாழ்க்கைத் தொழில் ஆரோக்கியத்தை வலுப்படுத்தி அதனை சரியான பாதையில் சிங்கப்பூர் ஊழியர் அணி அமைப்பு கொண்டுசெல்ல முடியும்.
வளர்ந்துவரும் வேலைச் சந்தைகள் குறித்துத் தொழிலாளர்கள் அறிந்துகொள்ளுவதற்கும் நீண்ட கால வாழ்க்கைத் தொழில் இலக்குகளை வகுப்பதற்கும் ஏற்ற நடவடிக்கைகளை அமைப்புகள் எடுக்கும்,” என அக்கூட்டறிக்கையில் அவை குறிப்பிட்டன.