தேசிய மரபுடைமைக் கழகத்தின் மரபுடைமை மானியத் திட்டத்தின்கீழ் நிதி கேட்கும் கலைப்படைப்புகளின் பன்முகத்தன்மை காலப்போக்கில் அதிகரித்துள்ளதாக அந்தக் கழகம் தெரிவித்துள்ளது.
“பத்தாண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின்கீழ் பதிப்புகளுக்காகவும் கண்காட்சிகளுக்காகவும் விண்ணப்பங்கள் தொடக்கத்தில் அதிகம் இருந்தன. ஆனால் இப்போது விளையாட்டுகள், வலையொளிகள், ஏன் சுவரோவியங்களும் மானியங்களைப் பெறுகின்றன,” என்றார் அந்தக் கழகத்தின் கல்வி, சமூகத் தொடர்பு இயக்குநர் திரு ஜெரல்ட் வீ.
இவ்வாறு சிங்கப்பூரின் மரபுடைமை பிறரை எளிதில் சேர்வதாகக் குறிப்பிட்ட திரு வீ, இவற்றால் மரபுடைமைச் சுற்றுச்சூழலே மேலும் துடிப்பாகவும் பன்முகத்தன்மை வாய்ந்ததாகவும் மாறுவதாகக் கூறினார்.
சையத் ஆல்வி சாலையிலுள்ள, சிங்கப்பூர் ஆரிய சமாஜ நிலையத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 15) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இத்தகவல் பகிரப்பட்டது. மானியம் பெற்ற ஐந்துத் திட்டங்களில் மூன்று படைப்புகள் பதிப்புகளாகவும் ஒன்று வெவ்வேறு தளங்களில் இயங்கும் வலையொளியாகவும் ஒன்று சுவரோவியமாகவும் உள்ளன.
வலையொளி படைப்பான ஏமி சிங் கோங் எங்கின் ‘த ஆப்ஜக்ட்ஸ் தெட் மேட் அஸ்’ (The Objects that Made Us), 20 தனிப்பட்ட நினைவுப்பொருள்களைப் பற்றியது. தமிழகத்திலிருந்து சிங்கப்பூருக்கு வந்து கணவரை இழந்த ஒரு பெண்ணின் வாழ்க்கைக் கதையும் அவரது இட்லி பானையும் இந்தப் படைப்பில் இடம்பெறுகின்றன.
பத்து மாதக் கடும் உழைப்புக்குப் பின் உருவான செட்டி மலாக்கா சமையல் புத்தகம் மானியம் பெற்ற மற்றோர் அண்மைய படைப்பாகும். இதில் 100 பதார்த்த செய்முறைகள் உள்ளன.
இவற்றுடன் ‘ஸின் ஜியா ஃபோ பெங் டு ஜி’ என்ற 19ஆம் நூற்றாண்டு நூலின் விளக்க உரைகள் கொண்டுள்ள மறுபதிப்பு, ஆர்ய சமாஜ் அமைப்பின் வரலாற்றை விளக்கும் கண்காட்சி மற்றும் சுவரோவியம் செய்தியாளர் கூட்டத்தில் மானியம் பெற்ற பணித்திட்டங்களாக அறிமுகம் செய்யப்பட்டன.
பிறரால் அரிதாக அறியப்படும் மரபுடைமைப் படைப்புகளை ஆதரிக்கும் மரபுடைமைக் கழக மானியம் இரு பிரிவுகளில் வழங்கப்படுகிறது. ஒரு பிரிவில் அதிகபட்சமாக 80,000 வெள்ளி என 50 விழுக்காடு வரையிலான நிதி ஆதரவு வழங்கப்படுகிறது. மற்றொன்றில் அதிகபட்சமாக 150,000 வெள்ளி என 80 விழுக்காடு வரையிலான நிதி ஆதரவு கொடுக்கப்படுகிறது.
மானியத் தரநிலைகளை விளக்கும் சந்திப்புகள், 2018லிருந்து இதுவரை 17 முறை நடத்தப்பட்டதாக திரு வீ கூறினார்.
மானியத்துக்கு விண்ணப்பிப்பவர் சிங்கப்பூரராக இருக்கவேண்டும் அல்லது அமைப்புகள் சிங்கப்பூர் அமைப்புகளாக இருக்கவேண்டும்.