திருவாட்டி கிருஷ்ணவேணி கண்ணு சக்திவேல், 45 ஆண்டுகளுக்கும் மேலாக குவீன்ஸ்டவுன் குடியிருப்புப் பேட்டையில் வசித்து வருகிறார்.
தற்போது 75 வயதாகும் இவர், குவீன்ஸ்டவுனில் வாழத் தொடங்கியதிலிருந்து இப்போது வரை அந்த இடம் தமக்கு அளித்த மறக்க முடியாத அனுபவங்களை நினைவுகூர்ந்தார்.
வாரத்தில் இரு நாள்கள் ‘ஃபெய்த் ஏக்ட்ஸ்’ என்னும் லாபநோக்கற்ற அமைப்புக்குச் சென்று அங்கு மூத்தோருடன் இணைந்து பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் திருவாட்டி கிருஷ்ணவேணி, தனியாக வசிப்பதால் அந்த அமைப்புக்குச் சென்று நேரத்தைச் செலவிடுகிறார்.
மாலை நேரங்களில் 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகளில் இவர் ஈடுபட்டு வருகிறார்.
இவரைப்போல மூத்தோர் பலர் அமைப்பில் சேர்ந்து தங்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் பங்கேற்று வருகிறார்கள்.
தேசிய மரபுடைமைக் கழகம், ‘ஃபெய்த் ஏக்ட்ஸ்’ அமைப்புடன் கைகோத்து சிங்கப்பூரில் இருக்கும் மூத்தோர்இன் உயிர் உளவியல் மற்றும் மனநலனை மேம்படுத்துவதற்காக ‘நல்வாழ்வுக்கு மரபுடைமை’ எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டம் மூலம் திருவாட்டி கிருஷ்ணவேணியும் அமைப்பில் இருக்கும் இதர மூத்தோரும் குவீன்ஸ்டவுனின் டாசன் குடியிருப்புப் பேட்டை வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்கின் அடித்தளத்தில் சுவரோவியங்களைக் கண்டு மகிழலாம்.
சிங்கப்பூர் வரலாறு மற்றும் நாட்டில் உள்ள பரிச்சயமான காட்சிகளைக் குறிக்கும் சுவரோவியங்கள் மூத்தோரின் நினைவலைகளைத் தூண்டும் விதமாக உள்ளூர் கலைஞர் டிராய் சின் கலைப்படுத்தியுள்ளார்.
திட்டத்தில் கலந்துகொள்ளும் மூத்தோர் சுவரோவியங்களை ரசித்து உரையாடல்களில் ஈடுபட்டு தங்கள் இளம் பருவத்தை நினைவுகூர முடியும்.
சுவரோவியங்களைக் கண்டு களிப்பது மட்டுமின்றி கலை நடவடிக்கைகளிலும் மூத்தோர் ஈடுபடலாம்.
கலை சிகிச்சையாளர் அந்நடவடிக்கைகளை வழிநடத்துவார். மூத்தோர் தங்களது இயக்கும் திறன்களையும் படைப்பாற்றலையும் மேம்படுத்த இத்திட்டம் வழிவகுக்கும்.
சிங்கப்பூர் மரபுடைமைக் கழகத்தின் ‘ஹெரிடேஜ்கேர்ஸ்’ திட்டத்தின் ஓர் அங்கமாக அமைக்கப்பட்ட ‘நல்வாழ்வுக்கு மரபுடைமை’ திட்டம், சிங்கப்பூரர்களின் நல்வாழ்வுக்கும் சுகாதாரத்திற்கும் பங்களிக்கும் முயற்சிகளில் ஒன்று.
மூத்தோருக்காக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இதுபோன்ற திட்டங்கள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும் என்பதைக் கழகம் உறுதிப்படுத்தியது.
தம்மைப் போன்ற மூத்தோர் இனி டாசன் பேட்டையில் புதிய அம்சங்களை எதிர்பார்க்கலாம் என்ற மகிழ்ச்சியுடன் திருவாட்டி கிருஷ்ணவேணி உள்ளார்.
“இது எங்களுக்குப் புதிய அனுபவமாக இருக்கும். இதனால் என்னால் பயன்பெற முடியும் என நம்புகிறேன். வீட்டிலேயே இருப்பதற்குப் பதிலாக நான் அடிக்கடி வெளிய செல்லலாம்,” என்றார் இவர்.