சட்டவிரோத வேலை நடைமுறைகள் காரணமாக ‘ரெட் கிரவுன்ஸ் சீனியர் லிவிங்’ என்னும் முதியோர் பராமரிப்பு இல்லத்தை நடத்தும் நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
அந்த நிறுவனம் சட்டவிரோத வேலை நடைமுறைகளில் ஈடுபட்டதை தான் கண்டறிந்ததாக மனிதவள அமைச்சு திங்கட்கிழமை (ஏப்ரல் 1) தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது.
வெளிநாட்டு ஊழியர்களுக்கான தீர்வை தொடர்பான உள்ளூர் விதிமுறைகளை அது கண்டுகொள்ளாமல் தவிர்த்தது என்றும் அமைச்சு தெரிவித்தது.
வசதிகளுடன் வாழ்வதற்கான முதியோர் இல்லத்தை இந்நிறுவனம் நடத்துகிறது. அந்த இல்லங்கள் தாதிமை இல்லங்களைப் போல் அல்லாமல், தனியாக வசிக்க விரும்பும் முதியோர் தங்களது அன்றாட நடவடிக்கைகளுக்கும் சொந்தப் பராமரிப்புச் சேவைகளுக்கும் உதவி வழங்கும்.
‘ரெட் கிரவுன்ஸ் சீனியர் லிவிங்’ பராமரிப்பு இல்லத்தின் வாடிக்கையாளர்கள் வெளிநாட்டு பணிப்பெண்களை வேலைக்கு அமர்த்தியதோடு அந்தப் பெண்களின் வேலை, நலனில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்காததற்கு அந்த நிறுவனமே சட்டப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் அமைச்சு கூறியுள்ளது.
“வெளிநாட்டு ஊழியர் வேலைச் சட்டத்தின்கீழ் நடைபெற்ற குற்றங்களுக்காக பராமரிப்பு இல்லத்தை நடத்தும் ரெட் கிரவுன்ஸ் நிறுவனத்திற்கும் அதன் இயக்குநர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகை அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளது,” என்று தெரிவித்துள்ள அமைச்சு, அபராதத் தொகை எவ்வளவு என்று குறிப்பிடவில்லை.
குறிப்பிட்ட அபராதத் தொகை என்பது ஒரு குற்றத்திற்குச் செலுத்துவதற்கான அபராதம். இதனைச் செலுத்திவிட்டால் குற்றவாளிகளுக்கு எதிராக மேற்கொண்டு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாது.
வெளிநாட்டு ஊழியர் வேலைச் சட்டத்தின்கீழ், இந்த குறிப்பிட்ட அபராதத் தொகை S$1,000க்கு (US$740) மிகாத அளவில் இருக்கலாம் என்று அந்தச் சட்டம் வரையறுக்கிறது.
வேலை அனுமதி தொடர்பான எந்தவொரு நிபந்தனையையும் அல்லது வேலை அனுமதிக்கான எந்தவொரு ஒழுங்குமுறை நிபந்தனையையும் மீறுவதற்கான அபராதம் S$1,000 என்று மனிதவள அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.