முக்கிய ஆகாய, கடல், நிலப் போக்குவரத்து நிறுவனங்கள் கூடுதல் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உரிமை வகிப்பது, செயல்பாடுகள், நிர்வாகப் பொறுப்புகள் ஆகியவற்றின் தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கூடுதல் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு பிற்பாதியில் நடப்புக்கு வரக்கூடிய போக்குவரத்துத் துறை (முக்கிய நிறுவனங்கள்) சட்டம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது; அதன்கீழ் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படலாம்.
புதன்கிழமையன்று (ஏப்ரல் 3) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கப்பட்ட சட்டத் திருத்தங்களின்படி சிங்கப்பூர் சிவில் விமானப்போக்குவரத்து ஆணையம், சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம், நிலப் போக்குவரத்து ஆணையம் ஆகியவை சம்பந்தப்பட்ட நிறுவனங்களை முக்கியமானவையாக வகைப்படுத்தலாம். சிங்கப்பூரில் முக்கிய போக்குவரத்துச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் அவற்றில் அடங்கும்.
சிங்கப்பூரின் ஆகாய, கடல், நிலப் போக்குவரத்துத் துறைகளில் உள்ள முக்கியமான நிறுவனங்களின் மீள்திறனை வலுப்படுத்துவதும் முக்கியப் போக்குவரத்துச் சேவைகளைப் பாதுகாப்பதும் பரிந்துரைக்கப்பட்ட புதிய சட்டத்தின் இலக்குகளாகும் என்று புதன்கிழமையன்று வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையில் போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டது.
“நமது ஆகாய, கடல் மையங்களின் முக்கியத்துவத்தை கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் வலியுறுத்தியுள்ளது. அதேவேளை, சிங்கப்பூரில் மக்கள் பாதுகாப்பாகவும் நம்பிக்கையுடனும் பயணங்களை மேற்கொள்ள பெரிய அளவில் இயங்கும் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் தொடர்ந்து முக்கியமாக இருந்து வருகின்றன,” என்று போக்குவரத்து அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
இவ்வாண்டு ஜனவரி மாதம் முக்கிய முதலீட்டுப் பரிசீலனைச் சட்டத்துக்கு (சிக்னிஃபிக்கன்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ரிவியூ ஆக்ட்) நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய சட்டத்தின்கீழ் அந்தந்தப் போக்குவரத்துத் துறைகளுக்கான பரிசீலனை அதனுடன் சேர்ந்து மேற்கொள்ளப்படுவது என்று போக்குவரத்து அமைச்சுப் பேச்சாளர் தெரிவித்தார்.
சிங்கப்பூரின் பாதுகாப்பு அக்கறைகளுக்கு முக்கியமான முதலீட்டுகளை முதலீட்டுப் பரிசீலனைச் சட்டம் ஆராய்கிறது. உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்து வரும் முதலீடுகளையும் அது ஆராயும்.