தோ பாயோ லோரோங் ஏழில் திருவாட்டி ஹமீத் ரஹ்மத்து நாட்சியார், 89, சொந்த வீட்டில் வசித்துவந்தாலும் அடிக்கடி தன்னை வந்து பார்க்கும் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் இன்முகத்துடன் வரவேற்பார். சிரித்துப் பேசி, பேரப்பிள்ளைகளைக் கொஞ்சி மகிழ்ந்து இவர் இன்புறுவார்.
குறிப்பாக, தம் 30 வயது பேரன் பாராஸ் அம்ஸாரைக் காணும்போது இவருக்குப் பெருமகிழ்ச்சி. வழக்கறிஞராகப் பணியாற்றும் பாராசுக்குச் சில வாரங்களில் திருமணம் நடக்கவுள்ளதால் இந்த நோன்புப் பெருநாள் பாட்டி ரஹ்மத்திற்குக் கூடுதல் தித்திப்பு.
நாகப்பட்டினத்தில் பிறந்து வளர்ந்த இவர், 1955ல் தம் கணவருடனும் இரண்டு மூத்த பிள்ளைகளுடனும் எஸ் எஸ் ரஜுல்லா கப்பலில் சிங்கப்பூர் வந்தவர்.
பாசிர் பாஞ்சாங் கம்பத்தில் திருவாட்டி ரஹ்மத்து, பாடுபட்டு மூன்று ஆண் பிள்ளைகளையும் மூன்று பெண் பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கினார். சிங்கப்பூரிலுள்ள தம் சொந்தக் குடும்பத்தைக் கவனித்துக்கொண்டே இந்தியாவில் வாழ்ந்த தம் தாயாரையும் இவர் கடைசிவரை பார்த்துக்கொண்டார்.
“எங்கள் அனைவரையும் வளர்க்க என் தாயார் சிரமப்பட்டார். மிளகாய் அரைப்பது, மிட்டாய் விற்பது போன்ற வேலைகளைச் செய்தார். அதே போல எங்கள் தந்தை, பள்ளியில் பாதுகாவலராகவும் ஓட்டுநராகவும் பணிபுரிந்தார்,” என்று ஓய்வுபெற்ற அரசாங்க ஊழியர் முஹம்மது ஃபாருக் அப்துல் வாஹாப், 66. தெரிவித்தார்.
இப்போது 15 பேரப்பிள்ளைகள், 7 கொள்ளுப்பேரப்பிள்ளைகள் உள்ள நிலையில், திருவாட்டி ரஹ்மத்து தனது வாழ்வை நிறைவாக உணர்கிறார். அன்றாடத் தேவைகளை இல்லப் பணிப்பெண் பார்த்துக்கொள்வதால், இவர் தம் குடும்பத்தினரையும் நண்பர்களையும் உபசரித்து வருகிறார்.
சிறு வயதில் வாரத்திற்கு ஓரிரு முறை தம் பாட்டியை வந்து பார்க்கும் பாராஸ், இனி மாதாமாதம் வர முயல்வதாகக் கூறினார்.
“பாட்டி எங்கள் நலனுக்காக துவா செய்வார். எங்களைப் படிக்கச் சொல்லி ஊக்கமளிப்பார். தோல்வியைச் சந்தித்தாலும் இறைவனின் முடிவை மதித்து, கவலையை விடும்படி அறிவுறுத்துவார்,” என்று அவர் கூறினார்.
கல்வி, வேலை குறித்து அறிவுரை வழங்கிய திருவாட்டி ரஹ்மத்து, இனி பாராசின் இல்லறத்தின் நன்மைக்காகவும் தமது யோசனைகளை அன்புடன் கூறுகிறார்.
“பெண்ணுக்குக் கணவரே இன்னொரு தாயும் தந்தையுமாக இருந்து கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்ளவேண்டும். அதுவும் ஈகைப் பண்புதான்,” என்கிறார் இவர்.