சிங்கப்பூர்க் குடியரசு ஆகாயப்படையின் (ஆர்எஸ்ஏஎஃப்) புதிய ‘எச்225எம்’, ‘சிஎச்-47எஃப்’ ரக ஹெலிகாப்டர்கள் முழுமையான செயல்பாட்டுத் தகுதியை எட்டியுள்ளதை ஒரு மைல்கல்லாக தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் ஏப்ரல் 11ஆம் தேதி நடைபெற்ற நிகழ்வில் அனுசரித்தார்.
சக வீரரைச் சுமந்து செல்லுதல், பெரிய சரக்குகளைத் தூக்குதல், தேடி மீட்புப் பணி, வான்வழி மருத்துவரீதியான வெளியேற்றம், பயங்கரவாதத்திற்கு எதிராகச் செயல்படுதல், மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணப் பணிகள் போன்ற செயல்பாட்டுத் தேவைகளை நிறைவு செய்வதில் இவ்விரு வகை ஹெலிகாப்டர்களும் கூடுதல் செயல்திறனுடனும் ஆற்றலுடனும் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘முழுச் செயல்பாட்டுத் தகுதி’ நிலையை அடைந்ததற்கான பதக்க வில்லைகளை வெளியிட்டதுடன் செம்பவாங் ஆகாயப்படைத் தளத்தில் ‘எச்225எம்’ ரக ஹெலிகாப்டர் ஒன்றில் டாக்டர் இங் பயணமும் செய்தார்.
உயிர்களைக் காப்பதிலும் சிங்கப்பூர் வான்வெளியைப் பாதுகாப்பதிலும் அர்ப்பணிப்பும் கடப்பாடும் கொண்டுள்ள ஆர்எஸ்ஏஎஃப் மற்றும் தற்காப்பு, அறிவியல், தொழில்நுட்ப அமைப்பைச் சேர்ந்த பணியாளர்களுக்கு அவர் தமது நன்றியையும் தெரிவித்தார்.
பலதரப்பட்ட செயல்பாட்டுப் பணிகளுக்கு ஆர்எஸ்ஏஎஃப் அதன் ஆற்றலை வலுப்படுத்திக் கொண்டு உள்ளதற்குப் புதிய ஹெலிகாப்டர்கள் சான்று பகர்கின்றன என்று குறிப்பிட்டார் டாக்டர் இங்.