சிங்கப்பூரில் பெண் காவல்துறை அதிகாரிகளின் சாதனைகள், பங்களிப்புகளைக் கௌரவித்து, சிங்கப்பூர் காவல் படை ஏப்ரல் 13 அன்று காவல் துறையில் பெண்களின் 75 ஆண்டு பங்களிப்பைக் கொண்டாடியது.
சிங்கப்பூர் காவல்துறைப் படையில், பெண்கள் 20 விழுக்காடு மூத்த தலைமைத்துவப் பதவிகளை வகிக்கிறார்கள் என்று ‘தி ஸ்டார் விஸ்டா’வில் நடந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் பேசிய தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ கூறினார்.
“பாரம்பரியமாக ஆண் ஆதிக்கம் செலுத்தி வந்த பல்வேறு நிபுணத்துவத் தொழில்களிலும் பெண் அதிகாரிகள் சாதனை படைத்துள்ளனர்,” என்றார் அவர்.
தற்போது கடலோரக் காவல் படை உயரதிகாரிகளில் மூன்று பெண் அதிகாரிகள் உள்ளனர், அவர்கள் தங்கள் ஆண் சகாக்களுடன் இணைந்து அதிக ஆபத்தான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர் என்று அவர் கூறினார். கடத்தல்காரர்களை அதிவேகமாகச் சென்று இடைமறிப்பது, ஆழ்கடல் தேடல், மீட்புப் பணி ஆகியவை இதில் அடங்கும்.
காவல்துறை மகளிர் குழு (பி.டபிள்யூ.சி) 2014 முதல் பெண் காவல்துறை அதிகாரிகளுக்கான அனைவரையும் உள்ளடக்கிய, நியாயமான வேலைச் சூழலை உருவாக்க கடுமையாக உழைத்துள்ளது என்று திருவாட்டி டியோ குறிப்பிட்டார்.
2022ஆம் ஆண்டில், அக்குழு காவல்துறைப் பிரிவுகளில் மகளிர் குழுக்களை அமைத்தது. இது அனைத்து பெண் அதிகாரிகளுக்கும் கருத்தறியும் பிரிவு, பலருடனும் தொடர்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்பட காவல்துறையின் ஆதரவு அமைப்பை நேரடியாக அணுக உதவுகிறது என்றார் அவர்.
காவல்துறை அமைப்புகளில் உள்ள குழந்தைப் பராமரிப்பு அறைகள் முதல், கருவுற்ற அதிகாரிகளுக்கான பேறுகால விடுப்பு, பயிற்சி விவகாரங்கள் வரையிலான ஐயங்களுக்குத் தீர்வு காண ஒரு தகவல் தளத்தையும் இது உருவாக்கி வருகிறது என்று திருமதி டியோ கூறினார்.
ஒரு பெண் தலைவராக, பெண்கள் வேலையில் எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்துகொண்டு, மேலும் முன்னேற்றமான வேலையிடத்தை உருவாக்கும் சிறந்த நிலையில் இருப்பதாக காவல்துறை மகளிர் குழுவின் தலைவரான ஏசி சியு கூறினார்.
புதிய சீருடையை அறிமுகப்படுத்தும்போது பெண் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவது, காவல்துறை நிலையங்களில் பாலூட்டும் வசதியை உறுதி செய்வது ஆகியவை இதில் அடங்கும்.
தற்போது கிளமெண்டி போலிஸ் பிரிவின் தலைவராக ஏசி சியு பணியாற்றுகிறார். காவல்துறை படையில் உள்ள கிட்டத்தட்ட 1,800 பெண் சேவையாளர்களில் இவரும் ஒருவர்.
அவர் தற்போது 650க்கும் மேற்பட்ட அதிகாரிகளைக் கொண்ட ஒரு பிரிவை மேற்பார்வையிடுகிறார். அதற்கு முன்னர், குற்றவியல் விசாரணை, செயல்பாடுகள், முன்னணிக் காவல், கொள்கை - திட்டமிடல், பொது விவகாரங்கள் உள்ளிட்ட பிற பொறுப்புகளில் பணியாற்றினார்.
தற்போது 30 விழுக்காடு அக்கம்பக்கக் காவல் நிலையங்கள், பெண் தளபத்திய அதிகாரிகளால் வழிநடத்தப்படுவதாக திருவாட்டி டியோ கூறினார். நிலப் பிரிவு விசாரணைப் பிரிவுகளின் மேற்பார்வையாளர்களில் கால் பகுதியினர் பெண் அதிகாரிகள் என்றார் அவர்.
1949ஆம் ஆண்டில் காவல்துறையில் சேர்ந்த முதல் 10 பெண்கள் தொடங்கி, இந்தப் பாதை பல பெண் காவல்துறையினரால் அமைக்கப்பட்டது. “காவல் துறையில் நமது பெண்களின் முன்னேற்றமும் சாதனைகளும் தற்செயலானது அல்ல,” என்று அமைச்சர் டியோ குறிப்பிட்டார்.