செந்தோசா தீவில் உள்ள மூன்று கடற்கரைகளில் ஒன்றான சிலோசோ கடற்கரை, உலகின் சிறந்த கடற்கரைகள் பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் வந்துள்ளது.
லண்டனைத் தளமாகக் கொண்ட, உலகக் கடற்கரைகளைப் பற்றி நிபுணத்துவ அறிக்கைகளை வெளியிடும் ‘பீச்அட்லஸ்’ அமைப்பு, ‘தங்கக் கடற்கரை விருது 2024’ஐ வழங்கவுள்ளது.
“பொதுவில் உலகின் சிறந்த கடற்கரைகளைப் பற்றி கட்டுரை வெளியிடும் அமைப்புகளிலிருந்து நாங்கள் மாறுபட்டு இருக்க விரும்புகிறோம். தூள் போன்ற மெல்லிய மண், தெளிவான நீல கடல்நீர் போன்றவற்றைத் தாண்டி நாங்கள் மக்களை அரவணைத்துக்கொள்ளும் கடற்கரையைத் தேடினோம்,” என்றார் ‘பீச் அட்லஸ்’ அமைப்பின் தலைமை நிர்வாகியும் இணை நிறுவனருமான டேவோர் பவிச்.
பெரும்பாலும் வலைப்பதிவாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் என 42 பேரைக் கொண்ட பயண நிபுணர்கள், அத்துறையில் செல்வாக்குடையவர்கள் சிறந்த கடற்கரைகளைத் தேர்வு செய்தனர்.
அந்த வகையில் பிரஞ்சு போலினீசியா தீவில் உள்ள ‘போரா போரா’ கடற்கரையே உலகின் ஆக சிறந்த கடற்கரையாகத் தேர்வு பெற்றது. நீல நிறத்திலான கடல் நீர் மற்றும் அழகிய கடற்கரைகள், சுற்றிலும் தென்னை மரங்கள் ஆகியவை நீதிபதிகளின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்தன.
தாய்லாந்தின் கிராபி தீவில் உள்ள ‘மாயா பே’ கடற்கரை ஐந்தாம் இடத்திலும், பாலித் தீவில் உள்ள ‘கெலிங்கிங்’ கடற்கரை 34வது இடத்திலும் தென்கொரியாவின் பூசான் நகரில் உள்ள ‘ஹெயுண்டே’ கடற்கரை 55வது இடத்திலும் வந்தன.
பட்டியலில் 91வது இடத்தைப் பிடித்தது செந்தோசா தீவில் உள்ள சிலோசோ கடற்கரை. பரபரப்பான நகரப்புற வாழக்கையிலிருந்து ஓய்வெடுக்க அமைதியான சூழலை சிலோசோ வழங்குகிறது என்று நீதிபதிகள் கருத்துரைத்தனர்.
மனிதனால் உருவாக்கப்பட்ட சிலோசோ கடற்கரை பகலில் குடும்பம் சார்ந்த நடவடிக்கைகளுக்குப் புகழ்பெற்ற இடமாகத் திகழ்கிறது. அங்கிருக்கும் மதுக்கூடங்கள், வெளிப்புறத்தில் அமர்ந்து உணவுண்ணுதல் போன்றவை இரவுநேரக் கேளிக்கையை விரும்புவோரைக் கவர்ந்துள்ளன.