வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் புகையிலைப் பொருட்களும் மதுபானங்களும் கடத்தி விற்பனை
எஸ்.வெங்கடேஷ்வரன்
கொவிட்-19 தொற்று தங்கும் விடுதிகளை வெளியுலகில் இருந்து துண்டித்துவிட்டதால், புகைபிடிக்க அல்லது மது அருந்த ஏங்கித் தவித்த வெளிநாட்டு ஊழியர்கள் அதை தீர்த்துக்கொள்ள நாடக் கூடாத வழிகளை நாடினர்.
ஒரு விடுதியில், சிகரெட்டும் மதுவும் வேலிக்கு வெளியிலிருந்து தூக்கி வீசப்பட்டன. குறைந்தது இரண்டு விடுதிகளில் குப்பை சேகரிப்போர், துப்புரவாளர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் வழியாக அவை கடத்தப்பட்டன.
அப்படிக் கடத்தி வரப்பட்ட சிகரெட்டுகளும் மதுபானங்களும் கூடுதல் விலை வைத்து, அதிலும் சில பொருட்கள் நான்கு மடங்கு விலை வைத்து விற்கப்பட்டதாகப் பெயர்கூற விரும்பாத ஊழியர்கள் சிலர் தமிழ் முரசு, ‘தி நியூ பேப்பர்’ நாளிதழ்களிடம் தெரிவித்தனர்.
சுங்கை தெங்கா விடுதியில், அங்கு வந்து செல்லக்கூடியவர்கள் யார் என்பதை அவர்கள் குறித்துக்கொண்டனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து அவ்விடுதியில் மதுபானத்திற்குத் தடை விதிக்கப்பட்டிருந்ததாக தேவா, 30, என்ற ஊழியர் சொன்னார்.
ஆனாலும், மதுபானம், தீர்வை செலுத்தப்பட்ட மற்றும் கள்ள சிகரெட்டுகள், சட்டவிரோதமான புகையிலை ஆகியவை அங்கு கடத்தி வரப்பட்டன.
அத்தகைய சட்டவிரோதப் பொருட்களைக் குப்பை சேகரிப்போர் கொண்டு வந்து, துப்புரவாளர்களிடம் கைமாற்றி விடுவர் என்றும் பின் அவர்கள் குறிப்பிட்ட சில ஊழியர்களிடம் கொடுத்து விடுவர் என்றும் திரு தேவா விவரித்தார். விடுதியில் உள்ள மற்ற ஊழியர்கள் அந்தக் குறிப்பிட்ட சில ஊழியர்களிடம் சென்று அவற்றைப் பெற்றுக்கொள்வர்.
“எது வேண்டுமானாலும் இங்கு கிடைக்கும். எனது புளோக்கில் உள்ள ஓர் அறையில் தங்கி இருக்கும் ஆடவர் ஒருவர் துப்புரவாளர்களிடம் இருந்து பொருட்களைப் பெறுகிறார்,” என்றார் திரு தேவா.
“மதுபானம் கேட்போர் காலி பிளாஸ்டிக் போத்தல் ஒன்றை அவரிடம் கொடுத்து விட வேண்டும். அவர் அந்த போத்தலில் மதுபானத்தை நிரப்பித் தருவார். விடுதியின் நிர்வாகப் பணியாளர்களுக்குச் சந்தேகம் வராமல் இருப்பதற்காகத்தான் இப்படி ஓர் ஏற்பாடு,” என்று அவர் விளக்கினார்.
திரு கோபால் என்று தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட 40களில் உள்ள ஓர் ஆடவர், சட்டவிரோதப் பொருட்கள் எதையும் தாம் வாங்கியதில்லை என்றும் ஆனால் அவற்றின் விலை எல்லாருக்கும் தெரியும் என்றும் சொன்னார்.
நான்கு மடங்கு விலை
ஒரு சிகரெட் பெட்டி 40 வெள்ளி வரைக்கும் 375 மி.லி. விஸ்கி 28 வெள்ளிக்கும் சட்டவிரோத மெல்லும் புகையிலை 25 வெள்ளிக்கும் விற்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
வெளியில் ஒரு பெட்டி சிகரெட் $10 முதல் $15 வரைக்கும் மெல்லும் புகையிலை $2.50 முதல் $5 வரைக்கும் விற்கப்படுகின்றன.
விடுதிகளில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து, ஊழியர்கள் சிலர் வெளியில் வேலைக்குச் சென்று வர முடிந்தது. அப்போது அவர்களில் சிலர் உணவுப் பொட்டலத்திற்குள் மதுப்புட்டிகளை மறைத்து வைத்து கொண்டு வர முயன்றனர். ஆனால் அவர்கள் மாட்டிக்கொண்டனர்.
பொங்கோலில் உள்ள எஸ்11 விடுதியில் உணவு விநியோக ஓட்டுநர்கள் மதுபானங்களையும் சிகரெட்டுகளையும் கள்ளத்தனமாகக் கொண்டு வந்து கொடுத்தனர்.
கிட்டத்தட்ட எட்டு ஊழியர்களைக் கொண்ட குழு இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைத்ததாகவும் உணவுப் பொட்டலங்களுக்குள் அவை மறைத்து வைத்துக் கொண்டு வந்ததாகவும் பெயர் வெளியிட விரும்பாத ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
குற்றவாளிகள் பிடிபட்டதை அடுத்து மே மாதவாக்கில் இத்தகைய கள்ளத்தனங்கள் முடிவுக்கு வந்தன.
வெள்ளிக்கு வெள்ளி தரகு
வெஸ்ட்லைட் தோ குவான் விடுதிகளில் கடத்தல் நடவடிக்கைகள் அவ்வப்போது அரங்கேறின.
வெளியில் இருப்பவர்கள் பொருட்களை வாங்கி, விடுதிக்குள் ஆளரவமற்ற மறைவான பகுதிகளில் அவற்றை வீசிவிட்டுச் செல்லும் வகையில் ஊழியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர் என்று திரு முத்து என்ற ஊழியர் சொன்னார்.
“பொருட்களின் விலைக்கு நிகரான தரகுப் பணத்தை அவர்கள் எடுத்துக்கொண்டனர். பத்து வெள்ளிக்குப் பொருள் வாங்கினால், அவர்களுக்குப் பத்து வெள்ளி கொடுக்க வேண்டும். இச்செயலில் இருக்கும் அபாயத்திற்காகவும் அவர்களின் செலவிற்காகவும் தரகுப்பணம் கொடுக்கப்பட்டது,” என்றார் அவர்.
நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டம் நடப்பில் இருந்தபோதுதான் வேலிக்கு வெளியே இருந்து மதுபானமும் சிகரெட்டும் வீசப்பட்ட சம்பவங்கள் பெரும்பாலும் இடம்பெற்றன என்று வெஸ்ட்லைட் தோ குவான் விடுதியையும் மேலும் நான்கு விடுதிகளையும் நடத்தி வரும் செஞ்சுரியன் குழுமத்தின் பேச்சாளர் குறிப்பிட்டார்.
கடந்த மே மாதத்தில் இருந்து அத்தகைய ஒன்பது சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்றும் அப்போது சிறிய அளவிலேயே பொருட்கள் கடத்தப்பட்டன என்றும் அவர் கூறினார். அதே நேரத்தில், பரவலாக விநியோகிக்கும் நோக்கத்தில் அவை கொண்டு வரப்பட்டன என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை என்றும் அவர் சொன்னார்.
அவை விடுதியின் விதியை மீறிய நடவடிக்கைகள் என்றாலும் சிங்கப்பூர் சட்டத்தை மீறி இடம்பெறவில்லை என்றும் அவர் சுட்டினார்.
“சிங்கப்பூர் சுங்கத் துறையுடனும் போலிசுடனும் அணுக்கமாக இணைந்து செயல்பட்டு வருகிறோம். கடந்த ஒன்பது ஆண்டுகளாக நாங்கள் சிங்கப்பூரில் விடுதிகளை நடத்தி வரும் நிலையில், எங்களது விடுதிகளுக்குள் சட்டவிரோதப் பொருட்கள் கடத்தப்பட்டதாகவோ விற்பனை செய்யப்பட்டதாகவோ எந்தச் சம்பவமும் இடம்பெறவில்லை,” என அந்தப் பேச்சாளர் கூறினார்.
கூடுதல் தகவல்:
கோக் யூஃபெங், டேவிட் சன்